சென்னையில் அதிர்ச்சி.. டிப்பர் லாரி மோதி மாலை முரசு டிவி நிருபர் உயிரிழப்பு
சென்னை: மாலை முரசு தொலைகாட்சி செய்தியாளர் செந்தில்குமார் சென்னையில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 38.
மாலைமுரசு தொலைகாட்சியின் தாம்பரம் பிரிவு செய்தியாளராக பணியாற்றியவர், செந்தில்குமார் (38 ). வண்டலூரில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை செய்தி சேகரிக்க, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி ஒன்று, செந்தில்குமார் பைக் மீது மோதியது. இந்த சம்பவத்தில், செந்தில்குமார்
பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் பலியான செந்தில்குமார் திருமணமானவர். செந்தில்குமாருக்கு, மனைவியும், 11 வயதில் ஒரு மகன், 8 வயதில் ஒரு மகள் உள்ளனர்.
செந்தில்குமார் மறைவால், அவரது குடும்பம் கதிகலங்கி நிற்கிறது. விபத்தில் செய்தியாளர் பலியான சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது . செந்தில்குமாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மறைந்த, செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்கிட வேண்டும். செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் செய்வோம். துணை நிற்போம். துயரத்தில் பங்கேற்போம் என்று தெரிவிகக்கப்பட்டுள்ளது.