Exclusive: அதிமுகவிலிருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறுவார்கள்... காரணத்தை விளக்கும் விஷ்ணுபிரபு..!
சென்னை: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளராக இருந்த விஷ்ணுபிரபு, அதிரடியாக அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் நேற்று இணைந்துள்ளார்.
திமுகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்காக அவரிடம் நாம் பேசினோம்.
அப்போது அவர் கூறியதாவது;
எல்லாத்துக்கும் "இவர்"தான் காரணம்.. அதிமுகவுக்கு சீட் கிடைக்கவும்.. திமுக சறுக்கவும்.. ஜஸ்ட் பாஸ்!
அதிமுகவின் அழிவு
''அதிமுகவின் அழிவுக்கு அமைச்சர்களாக இருந்தவர்கள் தான் காரணம். அம்மா இருந்த போது ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை வழிநடத்தினார். ஆனால் இப்போது உள்ளவர்களால் அதை செய்ய முடியவில்லை. எடப்பாடியை சில அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படவே விடவில்லை. அதிமுகவை தங்கள் குடும்ப கட்டுப்பாட்டுக்குள் ஒவ்வொரு அமைச்சரும் கொண்டு சென்றனர். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் எங்கே வளர்ந்து நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என அஞ்சி திறமையுள்ள பலரையும் அமைச்சர்கள் ஒதுக்கி வைத்தார்கள்.''
பதவி பறிபோய்விடும்
''அமாவாசை வந்தாலே அமைச்சர் பதவி பறிபோய்விடும் என்ற பதற்றத்தில் இருந்த அமைச்சர்கள் பலரும் அம்மாவின் மறைவுக்கு பிறகு ஆட்டம் போடத் தொடங்கினார்கள். என்னை போன்ற பலரும் மனம் வெம்பிய நிலையில் தான் இதுவரை அங்கு இருந்தோம். இப்போது அண்ணன் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நான் திமுகவில் இணைந்திருக்கிறேன். நேற்றிலிருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அதிமுக இளைஞர் பாசறை நிர்வாகிகள் 600-க்கும் மேற்பட்டோர் இதுவரை என்னை தொடர்பு கொண்டு நான் எடுத்துள்ள முடிவை வாழ்த்துகிறார்கள்.''
திமுகவின் கோட்டை
''கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு நிச்சயம் கோவையில் இருபத்து ஐந்தாயிரம் பேரை திமுகவில் இணைக்கத் திட்டமிட்டுள்ளேன். தலைவர் தளபதியும், இளைஞரணிச் செயலாளர் அண்ணன் உதயநிதியும் உத்தரவிட்டால் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் வேலுமணியை எதிர்த்து களப்பணியாற்றி திமுகவின் கோட்டையாக கோவையை மாற்றிக் காட்டுவேன். திமுகவில் நான் எல்.கே.ஜி. மாணவன், இருந்தாலும் கூட ஏற்கனவே உள்ள சீனியர்களுடன் இணைந்து செயல்பட்டு கோவையை திமுகவின் கோட்டையாக கொண்டு வருவேன்.''
விலகுவார்கள்
''மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுவதில் தவறில்லை. ஆனால் அதற்காக காலில் விழுந்து கிடப்பதா? இதையெல்லாம் மக்கள் பார்க்காமலா இருப்பார்கள். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் அதிமுகவில் வலிமையான தலைமை இல்லை, இதனால் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து இனி விலகுவார்கள்.''