நான் பொதுவாழ்விலிருந்து விலகியதை.. திரும்பப் பெற கேட்டுக்கொண்டவர் விவேக்.. தமிழருவி மணியன் இரங்கல்
சென்னை: பொதுவாழ்விலிருந்து விலகுவதாக நான் எடுத்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் விவேக் என்று தமிழருவி மணியன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகச் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனிற்றி ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக்கின் திடீர் மறைவுக்குத் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள். சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"விவேக்குக்கு ஏன் ஊசி போட்டீங்க".. வாயை கொடுத்த மன்சூர்.. பாய்ந்த புகார்.. முன்ஜாமீன் கோரி மனு!
தமிழருவி மணியன் இரங்கல்
தமிழருவி மணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓராண்டுக்கு முன்பு முன்னணி இதழில் விவேக் வழங்கிய நேர்காணலில், நம் மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லை. 'தமிழருவி மணியன் என்ற நேர்மையாளருக்கு என்ன அங்கீகாரத்தை இவர்கள் தந்து எந்தப் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தனர்?' என்று கேட்டிருந்ததைக் கண்டு நான் வியந்தேன். அவருக்கும் எனக்கும் அன்றுவரை நேரடித் தொடர்பு இருந்ததில்லை. நான் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன்.
பேனா
ஒருநாள் சாலிகிராமத்திலுள்ள விவேக் வீட்டிற்குச் சென்றிருந்தேன். மனம் நெகிழ்ந்து வாசலில் வரவேற்றார். ஒருமணி நேரம் இருவரும் பேசினோம். அவருடைய பல்துறை அறிவாற்றலும், மனிதநேயமும், சமூக நலனில் அவருக்கு இருக்கும் உண்மையான அக்கறையும், தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலரவேண்டும் என்ற அவருடைய ஏக்கமும் எனக்கு வியப்பை ஏற்படுத்தின. சந்திப்பின் முடிவில், அவருடைய நினைவாக வைத்துக்கொள்ளும்படி ஒரு விலையுயர்ந்த பேனாவை எனக்களித்தார். 'அன்பைத்தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை' என்று மறுத்துவிட்டேன்.
விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டார்
பொய்த்தனமும் போலியும் மலிந்த அரசியலிலிருந்து முற்றிலும் நான் விலகுவதாக அறிவித்த அறிக்கையை வாசித்த விவேக் "ஒரு பேனாவைக்கூட பெற மறுக்கும் ஒருவர் பொதுவாழ்விலிருந்து விலகுவதென்று எடுத்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும்" என்று ட்வீட் செய்து தொலைப்பேசியிலும் என்னை அழைத்து 'விலக வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார். என்னுடைய 'வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள்' நூலைக் கடந்த ஆண்டு கொரோனா சூழலில் வாசித்துக் கொண்டிருப்பதாகப் பதிவிட்டதோடு தொலைப்பேசியிலும் அழைத்துப் பேசிய விவேக், 'கொரோனாவின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவுடன் நாம் அவசியம் சந்திக்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்' என்றார்.
கருணையற்றக் காலம்
ஆனால், கருணையற்றக் காலம் நொடிப்பொழுதில் அந்த அற்புதமான கலைஞனை, நெறி சார்ந்து வாழ்ந்த நல்லவனை, இயற்கையை நேசித்த இனிய பண்புகள் கொண்டவனை, மனித நேயம் மிக்கவனை, சிரிக்கவைத்து சிந்தனையைத் தூண்டியவனை, நம்மிடமிருந்து பறித்துக்கொண்டது. நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரமாகத் துலங்கியவர் விவேக்" என்று தமிழருவி மணியன் உருக்கமாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.