நீங்க யாராக இருந்தாலும் சரி... இப்ப எங்ககூட வாங்க... இளவரசியின் சம்மந்தியை கைது செய்த போலீஸ்..!
சென்னை: இளவரசியின் சம்மந்தியும், விவேக் ஜெயராமனின் மாமனாருமான பாஸ்கரை செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திர போலீஸ் கைது செய்துள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலாவோடு தற்போது சிறையில் இருக்கிறார் இளவரசி. இவரது மகன் விவேக் ஜெயராமன் ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை கவனித்து வருகிறார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாநகர் பாஸ்கர் என்பவரின் மகளை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் ஜெயலலிதாவுக்கு விருப்பம் இல்லாததால் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை. சசிகலா மட்டுமே சிறிது நேரம் சென்று வந்தார்.
காரணம் பாஸ்கர் பற்றி உளவுத்துறையினர் கொடுத்த பைல் ஜெயலலிதாவுக்கு கடும் அதிருப்தியை கொடுத்தது. இதனிடையே விவேக்கின் பிடிவாதத்தால் சசிகலாவும், இளவரசியும் அண்ணாநகர் பாஸ்கர் மகளையே திருமணம் செய்து வைத்தனர். இதில் ஜெயலலிதாவுக்கு அப்போது மன வருத்தமும் ஏற்பட்டது.
நாளடைவில் எல்லாம் சரியாகி சென்றுகொண்டிருந்த சூழலில், பாஸ்கரை நேற்று அதிரடியாக கைது செய்து ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளது அம்மாநில போலீஸ். பாஸ்கருக்கு கட்டை பாஸ்கர் என்ற பெயரும் உண்டு. மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
அண்ணாநகர் இல்லத்துக்கு பாஸ்கரை கைது செய்ய ஆந்திர போலீஸ் சென்ற போது காரில் அமர்ந்துகொண்டு கீழே இறங்க மறுத்து யாரிடமோ தொலைபேசியில் பேச முயற்சித்திருக்கிறார் . இதையடுத்து கோபமடைந்த ஆந்திர போலீஸ் நீங்க யாராக இருந்தாலும் சரி இப்போது வாங்க என அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இம்மாதம் இறுதியில் விடுதலையாகவுள்ள நிலையில் அவரது சம்மந்தி இப்போது சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.