அமமுகவுக்கு பிரச்சாரம் செய்ய நடிகர் விவேக் மறுப்பு!
சென்னை: அமமுகவுக்கு பிரச்சாரம் செய்ய நடிகர் விவேக்கை அழைத்தபோது விவேக் பல நிபந்தனைகளை விதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தேர்தல் களம் அனலடித்து வருகிறது. தமிழகத்தில் வழக்கமாக தேர்தல் என்றாலே நடிகர் நடிகைகளின் பிரச்சாரம் இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த தேர்தலில் நடிகர் நடிகைகளின் பிரச்சாரங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை திரைத் துறையை சேர்ந்த வடிவேலு, செந்தில், தியாகு, வெண்ணிற ஆடை நிர்மலா, விந்தியா, சிம்ரன் பாத்திமா பாபு, ராமராஜன், சிங்கமுத்து என்று ஒரு பட்டாளமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.
ஆனால் இம்முறை இந்த அளவுக்கு நடிகர்களோ நடிகைகளோ களமிறக்கப்படவில்லை. அதற்கு ஒரு காரணம் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்றும் கூறப்படுகிறது.
விவேக்கை அழைத்த அமமுக
இந்நிலையில் காமெடி நடிகர் விவேக்கை தினகரன் தங்களது அணிக்கு பிரச்சாரம் செய்ய அழைத்ததாக கூறுகிறார்கள் அமமுகவினர். அமமுகவில் தினகரனை தாண்டி அவர்களுடைய பிரச்சார வியூகங்களை மக்களிடம் எடுத்துக் கூற கட்சியில் இருந்து பிரபலங்கள் பெரிய அளவில் யாரும் இல்லை.
ரஞ்சித்தும், செந்திலும்
இதை தாண்டி சமீபத்தில் பாமகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த நடிகர் ரஞ்சித், மற்றும் நடிகர் செந்தில் ஆகியோர் அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதோடு தினகரனும் 40 மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சுற்றி சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
போரடிக்கும் முகம்
அதோடு ஜெயா டிவியை திறந்தாலே தினகரனின் முகம் மட்டும்தான் வருகிறது என்று ஜெயா டிவி ஊழியர்களே அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது பிராச்சாரங்கள் மட்டுமே காண்பிக்கப் படுகிறது. இந்த நிலையில் நடிகர் விவேக்கை தங்களுக்கு பிரச்சாரம் செய்யுமாறு அவரை தினகரன் அழைத்துள்ளார் இதை ஏற்றுக் கொண்ட நடிகர் விவேக் அமமுகவிற்கு வாக்களியுங்கள் என்று மட்டுமே பிரச்சாரம் செய்வேன் என்று கூறியுள்ளார்.
விவேக்கின் நிபந்தனைகள்
அதிமுக தலைவர்களையோ பிற கட்சியை சேர்ந்தவர்களையோ விமர்சித்து பேசமாட்டேன் என்றும் விவேக் கூறியுள்ளார். ஆனால் அமமுகவினரோ அதிமுகவினரை விமர்சித்து பிரச்சாரம் செய்தால்தான் அது மக்கள் மத்தியில் எடுபடும் என்றும் பொதுவான பிரச்சாரத்தை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். இதற்கு விவேக் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அது ரொம்ப கஷ்டமப்பா
தான் ஒரு குறிப்பிட்ட கட்சியை சார்ந்து இயங்கவில்லை என்றும் அனைத்துக் கட்சியிலும் தனக்கு நண்பர்கள் இருப்பதால் தன்னால் மாற்றுக் கட்சியினரை விமர்சிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.