மார்பில் காயம்.. விலகா மர்மம்.. தீரா காதல்.. விஐபிக்கள் சகவாசம்.. சித்ரா மரணத்துக்கு யார்தான் காரணம்
சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம் என்ற விசாரணை நடந்து வருகிறது
சென்னை: வேறு ஏதோ காரணத்துக்காகத்தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று ஆர்டிஓ தரப்பு கூறியுள்ள நிலையில், அது என்ன காரணமாக இருக்கும் என்ற ஆதங்கம் சித்ராவின் ரசிகர்கள் மனதில் எழுந்து வருகிறது.
சித்ரா இறந்து போய் இத்தனை நாள் ஆகியும், அவர் எதனால் இறந்தார் என்பது கண்டுபிடிக்க முடியாத மர்மமாக நீடித்து வருகிறது. தற்கொலைக்கு தூண்டியதாக ஹேமந்தை போலீசார் ஜெயிலில் அடைத்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, 14ம் தேதி, சித்ரா குடும்பத்தினரிடம் விசாரணையை துவங்கினார்.
கணவர் ஹேம்நாத், மாமியார், மாமனார் மற்றும் சித்ராவின் நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீட்டினர், சக நடிகையர், சித்ரா தற்கொலை செய்த ஓட்டல் ஊழியர் என, 14 பேரிடம், விசாரணை மேற்கொண்டனர்.
முடிந்தது ஆர்டிஓ விசாரணை.. சித்ரா மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழுமா?.. பரபரக்கும் 250 பக்க அறிக்கை!
விசாரணை
மேலும், சித்ராவின் உதவியாளர் ஆனந்திடமும் விசாரணை நடந்தது.. இந்த விசாரணையில் ஆஜரானவர்கள் கூறிய வாக்குமூலம் அடிப்படையில், எழுத்துபூர்வ அறிக்கை தயார் செய்து, பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுதர்சனிடம், ஆர்டிஓ திவ்யஸ்ரீ வழங்க உள்ளார்.
அறிக்கை
இந்த அறிக்கை தாக்கலுக்கு பின்னரே சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமையா அல்லது வேறு பிரச்னை காரணமா என்பது தெரியவரும். எனினும், சித்ரா மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணமில்லை என்றும், அதற்கான முகாந்திரமே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளதாம்... தவிர, வேறு ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் சித்ரா தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்றும் ஆர்டிஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
இதுதான் தற்போது ட்விஸ்ட்டாக எழுந்துள்ளது.. ஆர்டிஓ அறிக்கையை போலீசாரிடம் ஒப்படைத்த பிறகுதான், அந்த அறிக்கையினை ஒப்பிட்டு பார்த்த பிறகுதான் அடுத்தகட்டமாக விசாரணை நடைபெறவுள்ளது.. வரதட்சணை கொடுமை இல்லை என்ற தகவல் உறுதியாகி உள்ளது.. கல்யாணத்துக்கு சித்ராவுக்கு 50 சவரன் நகையும், ஹேமந்த்துக்கு 20 சவரன் நகையும் தர போவதாக ஏற்கனவே சித்ராவின் பெற்றோர் சொல்லி இருந்தனராம்.
விசாரணை
அது சம்பந்தமாக சித்ராவின் அப்பாவும் தன் புகாரில் கூறியிருந்ததால்தான், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்றது.. ஒருவேளை வரதட்சணை கொடுமை உறுதியாகி இருந்தால், ஹேமந்த் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்ட நிலையில், அது தற்போது இல்லை என்று நிரூபணமாகி உள்ளது. அப்படியானால், சித்ரா தற்கொலைக்கு உண்மையிலேயே என்ன காரணம் என்ற அடுத்த சந்தேகம் எழுகிறது.. சித்ரா தற்கொலைக்கு தன் மகன் காரணம் இல்லை, வேறு ஏதாவது காரணமாக இருக்கலாம என்று ஹேமந்த் அப்பாவும் சொல்லி இருந்த நிலையில், இந்த வழக்கின் போக்கு பரபரப்பை தந்து வருகிறது..
உடன்பாடில்லை
இதனிடையே, ஒரு பிரபல பத்திரிகைக்கு, வக்கீல் மூலமாக ஹேமந்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது.. அப்போது ஹேமந்த், "'சித்ராவிடமோ, சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில், நான் எதுவுமே பேசலை... நிச்சயதார்த்தத்துக்கு பிறகு சீரியல்ல நெருக்கமான காட்சிகள் வெச்சதுல சித்ராவுக்கே உடன்பாடில்லை... இதுதான் உண்மை. அதனால நான் சித்ரா அம்மாகிட்ட மட்டும் 'இதுபத்தி சேனல்கிட்ட பேச முடியுமா'னு கேட்டேன். அவங்களும் சேனலுக்கு பேசினாங்கன்னு நினைக்கிறேன்..
கோபம்
சம்பவத்தன்னைக்குகூட, சித்ரா என்கிட்டே "அம்மா ஒண்ணு சொல்றாங்க; நீங்க ஒண்ணு சொல்றீங்க... என்னை யாருமே நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறீங்க'னு என்கிட்ட கோபமா கத்துனாங்க... பதிலுக்கு நானும் கோபமாக பேசினேன்.. சின்னதா ஒரு வாக்குவாதம் வந்தது... அங்கேயே இருந்தா பிரச்சனை பெருசாகிடுமோன்னு நினைச்சு நான் சிகரெட் புடிக்க வெளியில் வந்துட்டேன்... நான் வந்ததும் அவங்க உள்ள கதவை சாத்திக்கிட்டாங்க. இதுதான் நடந்தது.'' என்று கூறியுள்ளார்.
யார் காரணம்?
ஆக, சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம்? யார்தான் காரணம்? என்பது புதிதாக தொடர்ந்து வருகிறது.. தூக்கில் தொங்கிய சித்ரா கழுத்தில் ஏன் காயமில்லை என்ற கேள்விக்கும், சித்ரா மார்பில் காயம் இருந்ததாக சொல்லப்படுவது உண்மையா, இல்லையா என்று தெரியாத நிலையில், இந்த தற்கொலையில், தினமும் கிளம்பி வரும் யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விரைவில் விடை கிடைக்க வேண்டும் என்பதே சித்ரா ரசிர்களின் ஆதங்கமாக இருக்கிறது. எப்படியும் நம் போலீசார் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் நிறையவே உள்ளது.