சிறையிலிருந்து வெளியே வந்தாலும் "க்வீன்" ஆக முடியாத சசிகலா.. ஆனால் "கிங்" மேக்கராகலாம்!
சென்னை: பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவதையொட்டி விடுதலை செய்யப்படவுள்ள சசிகலா 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்கள் கூறுகின்றன.
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு விதிக்கப்பட்ட ரூ 10 கோடியையும் அவர் செலுத்திவிட்டார். இந்த நிலையில் இன்று விடுதலையாவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியலில் புதிய திருப்பம் ஏற்படும் என தெரிகிறது.
சிறை நிர்வாகம்
இதனிடையே அவர் கடந்த 20-ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரது விடுதலையில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்று விடுதலை செய்யப்படுவார் என சிறை துறை நிர்வாகம் அறிவித்திருந்தது.
டிஸ்சார்ஜ்
அவர் அனுமதிக்கப்பட்டுள்ள விக்டோரியா மருத்துவமனையில் விடுதலைக்கான கையெழுத்தை பெற்றுக் கொண்டு அதற்கான நகலை மருத்துவமனையிடம் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர் இன்று மாலை சென்னைக்கு வருவாரா என தெரியவில்லை. கொரோனா தொற்று இல்லாத நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதும் தெரியவில்லை.
சசிகலா 10 ஆண்டுகள்
இந்த நிலையில் ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை ஆன நாளில் இருந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தண்டனை அனுபவிக்க தொடங்கிய நாளில் இருந்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.
4 ஆண்டுகள் சிறையில்
இந்த 10 ஆண்டுகளில் 4 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார் சசிகலா, மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு சசிகலா தேர்தலில் போட்டியிட முடியாது. அதே நேரத்தில் கட்சி பதவிகளை வகிப்பதற்கு எந்தவித தடையும் அவருக்கு விதிக்கப்படாது என்பது நினைவுக்கூரத்தக்கது.