2021 சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போடணுமா? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது அருகில் நடைபெறும் முகாமிற்கு சென்று பெயர் சேர்த்து 2021 சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட தயாராகுங்கள் வாக்காளர்களே.
சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல். திருத்தம் செய்தல் மற்றும் நீக்கம் செய்வதற்காக இன்று சனிக்கிழமையும் நாளை 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. உங்களின் வீட்டிற்கு அருகிலுள்ள முகாமிற்கு சென்று பெயர் சேர்ப்பவர்கள், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்பவர்கள் செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியலை சரிசெய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதையொட்டி கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை செய்து கொள்ளலாம்.
பொதுமக்கள் நலன் கருதி இன்று 12 நாளை 13ஆம் தேதியும் 2 நாட்கள் வாக்காளா்கள் சோ்ப்பு குறித்த சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி மாதம் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர்களுக்கு வழங்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்கவும் மற்றும் திருத்தம், நீக்கம் குறித்தும் இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1
முகவரி சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.பாஸ்போர்ட்
2.கேஸ் பில்
3.தண்ணீர் வரி ரசீது
4.ரேஷன் அட்டை
5.வங்கி கணக்கு புத்தகம்
6.ஆதார் கார்டு
வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.10ம் வகுப்பு சான்றிதழ்
2.பிறப்பு சான்றிதழ்
3.பான் கார்டு
4.ஆதார் கார்டு
5.ஓட்டுனர் உரிமம்
6.பாஸ்போர்ட்
7.கிசான் கார்டு
அடையாள சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)
1.பான் கார்டு
2.ஓட்டுனர் உரிமம்
3.ரேஷன் கார்டு
4.பாஸ்போர்ட்
5.வங்கி கணக்கு புத்தகம் போட்டோ உடன்
6.10ம் வகுப்பு சான்றிதழ்
7.மாணவர் அடையாள அட்டை
8.ஆதார் கார்டு
இதையடுத்து வரும் ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்கள் இந்த சிறப்பு முகாம்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற விரும்பும் மக்கள், இந்த சிறப்பு முகாம்களை தவறவிடக் கூடாது என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.