அமமுகவின் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்தது.. நீக்கப்பட்ட விபி கலைராஜன் திமுகவில் ஐக்கியம்
Recommended Video
சென்னை: தினகரன் கட்சியிலிருந்து அடுத்த விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன். இவர் நேற்று மாலை அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இன்று திமுகவில் இணைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது. திமுகவின் அதிகாரப் பூர்வ நாளிதழான முரள்சொலி தினகரனை கடுமையாக விமர்சித்தது. அப்போது முன்னாள் அமைச்சரும் அமமுகவின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். அவர் திமுகவில் இணைந்ததுமே அவரைத் தொடர்ந்து அம்முக நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைவர் என்று எதிர்பார்க்கப் பட்டது. திமுகவும் அதற்கான வியூகங்களை வகுத்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து தேர்தல் அறிவிப்புகள் என்று கட்சிகள் பிசியாக இருந்ததால் அப்படி நிர்வாகிகள் தாவல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற அமமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய தினகரன் நாம் நமது மேடைகளில் திமுகவை கடுமையாக எதிர்க்கவேண்டும், அதிமுக எதிர்ப்போடு திமுக எதிர்ப்பையும் நாம் கடுமையாக காட்டவேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்த நிலையில் அமமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் கடந்த ஒரு மாதமாகவே தினகரனுடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் கட்சி தாவும் முடிவில் இருந்திருக்கிறார் என்பதை தினகரன் ஸ்மெல் செய்து விட்டார்.
இதனையடுத்து கலைராஜனுடன் அவரது ஆதரவாளர்கள் யாரும் கட்சியிலிருந்து சென்றுவிடாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். இதனால் கலைராஜணைடன் முக்கிய நிர்வாகிகள் செல்வதை தடுத்துள்ளதாக அமமுக மாநில நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
EXCLUSIVE: கட்சி கொடி, பேனர் இதெல்லாம் தூக்கிட்டு வரக் கூடாது.. ஒரு கட் அண்ட் ரைட் அதிரடி கிராமம்!
இப்படியாக கலைராஜன் ஒருமாதமாக தினகரனின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தபோது நேற்று திருவாரூர் பிரச்சாரத்திற்காக ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டு சென்றபோது கலைராஜனும் திருச்சிக்கு சென்றா. அங்கு சங்கம் ஹோட்டலில் ஸ்டாலினை சந்தித்து பேசிய கலைராஜன் திமுகவில் சேர்வதற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்.
இதையடுத்து குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கலைராஜன் திமுகவில் இணைந்து கொண்டார். இவரையடுத்து அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழுமா என்பது விரைவில் தெரியவரும்.