சென்னை மேற்கு திமுக மா.செ. பதவி- கலைராஜனுக்காக படுதீவிரமாக களமிறங்கிய மாஜி அதிமுக பிரமுகர்கள் லாபி
சென்னை: கொரோனாவால் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. காலமான நிலையில் அவர் வகித்து வந்த திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வி.பி. கலைராஜனை முன்னிறுத்தி வருகின்றனர் திமுகவுக்கு தாவிய அதிமுக மாஜி பிரமுகர்கள் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஜெ. அன்பழகன், கொரோனாவால் உயிரிழந்தார். இது திமுகவினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் ஜெ. அன்பழகன் வகித்து வந்த பதவி யாருக்கு போகப் போகிறது? என்பதுதான் திமுகவில் நடந்துவரும் முதன்மை விவாதம். தொடக்கத்தில் இந்த பட்டியலில் கு.க. செல்வம், வி.பி. கலைராஜன் பெயர் அடிபட்டது.
சென்னை மருத்துவக் கல்லூரி டீனுக்கு கொரோனா?.. மருத்துவ விடுப்பில் சென்றதால் பரபரப்பு
மாஜி அதிமுகவினரிடம் ஒப்படைப்பு?
இருவருமே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள். ஏற்கனவே சென்னை கிழக்கு மாவட்டத்தை அதிமுகவில் இருந்து வந்த சேகர்பாபுவிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இந்த நிலையில் மேற்கு மாவட்டத்தையும் அதிமுகவிடம் இருந்து வந்த நபரிடமே ஒப்படைக்கப் போகிறதா? திமுக தலைமை என்கிற கேள்வி எழுந்தது.
அன்பழகன் தம்பி கருணாநிதி
அதேநேரத்தில் ஜெ. அன்பழகன் குடும்பத்தில் அவரது தம்பி ஜெ. கருணாநிதியும் பெயரும் அடிபட்டு வருகிறது. அன்பழகனின் நிழலாகவே வலம்வந்தவர். அதனால் அன்பழகனிம் இடத்தை எளிதாக கருணாநிதியால் நிரப்பிவிட முடியும் என்கின்றனர் சில சீனியர்கள்.
கே.கே.நகர் தனசேகரன்
இந்த பட்டியலில் கே.கே.நகர் தனசேகரன் பெயரும் அடிபடுகிறது. திமுகவில் நீண்டகாலம் முக்கிய பதவி கிடைக்கும் என பேசப்பட்டு வருகிறவர்களில் தனசேகரனும் ஒருவர். அவருக்குத்தான் நிச்சயம் இம்முறை திமுக தலைமை வாய்ப்பு கொடுத்துவிடும் என்றே நம்புகின்றனர் அப்பகுதி திமுகவினர். மேலும் மயிலை வேலுவின் பெயரும் மாவட்ட செயலாளர் பதவிக்கு அடிபடுகிறது.
அதிமுக பிரமுகர்கள்
ஆனால் வி.பி. கலைராஜனுக்கு எப்படியும் மாவட்ட் செயலாளர் பதவியை வாங்கித் தந்துவிடுவது என்பதில் திமுகவில் ஐக்கியமான மாஜி அதிமுக பிரமுகர்கள் லாபி படுதீவிரமாக இருக்கிறதாம். அதுவும் நடிகர் கட்சியின் கொள்கை பரப்பு செயலராக இருந்தவர்தான் இந்த லாபியின் லீடராக பரபரத்துக் கொண்டிருக்கிறாராம்.