யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய பெண்ணுக்கு போலீஸ் சம்மன்?.. பணம் பெற்று பேசியதாக தகவல்
சென்னை: யூடியூப் வீடியோவில் பேசிய பெண் காசு வாங்கி கொண்டு இவ்வாறு பேசியதாக தெரியவந்ததை அடுத்து அந்த பெண்ணுக்கும் சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள், கடற்கரைக்கு வரும் பெண்களை யூடியூப் சேனல் வைத்திருக்கும் இருவர் ஆபாசமான கேள்விகளை கேட்டு அதற்கு பதில் அளிக்குமாறு தொந்தரவு செய்வதாக காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் சாஸ்திரி நகர் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் அந்த யூடியூப் சேனலின் விஜே, உரிமையாளர், கேமராமேன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
யூடியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை
செல்போன்கள்
இது போல் ஆபாசமாக பேச சொல்லி எடுக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு 7 கோடி பேர் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதில் இணையதளத்தில் பதிவு செய்யப்படாத நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது.
கேமராமேன்
இந்த சேனல் விஜேவும் கேமராமேனும் பெசன்ட் நகர் கடற்கரையில் தனியாக அமர்ந்திருக்கும் பெண்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அதை மொபைல் போனில் வீடியோவாக எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனை வைத்து பெண்களை ஏதேனும் மிரட்டியுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
1500 ரூபாய்
இந்த யூடியூப்பில் ஆபாசமாக பேசி வைரலான அந்த பெண் புகாரளிக்கவில்லையாம். இதனால் அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். அந்த பெண்ணுக்கு 1500 ரூபாய் கொடுத்து அப்படி பேச வைத்ததாக அந்த பெண் கூறியிருந்தார்.
வைரலான பெண்ணுக்கு சம்மன்
மேலும் எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தைதான் தான் பேசியிருப்பதாகவும் அந்த பெண் தெரிவித்திருந்தார். தான்தான் புகார் அளித்ததாகவும் அந்த பெண் கூறியிருந்த நிலையில் தற்போது வேறு ஒரு பெண் புகாரளித்திருப்பது தெரியவந்துள்ளது.