ரூ 41,000 கோடி மர்மம்! எடப்பாடி சீக்ரெட்.. ஓபிஎஸ் அனுமதிக்கு வெய்டிங்! பொடி வைக்கும் ஜேசிடி.பிரபாகர்
சென்னை: அதிமுகவில் உட்கட்சி குழப்பம் இன்னும் கூட முடியாத நிலையில், ஜேசிடி பிரபாகர் தொடர்ந்து எடப்பாடி தரப்பைக் கடுமையாகச் சாடி வருகிறார்.
அதிமுகவில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி குழப்பம் தொடர்ந்து வருகிறது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாகப் பிரிந்து மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.
ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரைத் தொடர்ந்து சாடி வருகின்றனர். இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்த வைத்திலிங்கம்?.. பயத்தில் பேசும் தங்கமணி.. விளாசிய ஜேசிடி பிரபாகர்
ஜேசிடி பிரபாகர்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேசிடி பிரபாகர், "உச்ச நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி தரப்பைக் கதிகலங்கிச் செய்துள்ளது. தங்கமணி குழப்பத்துடனும், அச்சத்துடனும் இருக்கிறார். நாமக்கல் மாவட்டத்தை ஓபிஎஸ் 3ஆகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்து உள்ள நிலையில், தங்கமணி கவலை அடைந்து உள்ளார். இதனால் தான் அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் சொல்லும் அனைத்துமே பொய் தான்.
தர்மயுத்தம்
நான் தர்மயுத்தம் காலத்தில் இருந்து ஓபிஎஸ் உடன் பயணித்து வருகிறேன். தர்மயுத்தம் காலத்தில் ஒரு நாள் எங்களை அழைத்த ஓபிஎஸ், 'இப்படியே இருந்தால் கட்சியும், ஆட்சியும் வீணாகிவிடும்.. தர்மயுத்தத்தின் நோக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். எனவே கட்சியின் ஒற்றுமையைக் கருதி இணைந்து செயல்படலாம்' என்று பெருந்தன்மை உடன் சொன்னார்.
தங்கமணி, வேலுமணி
அப்போது ஓபிஎஸ் கைகளைப் பிடித்துக் கொண்ட தங்கமணியும் வேலுமணியும் அப்போது என்ன சொன்னார்கள் என்பது அவர்களின் மனசாட்சிக்குத் தெரியும். இந்த முறை எடப்பாடி முதல்வராக இருக்கட்டும் என்றும் அடுத்த முறை நீங்கள் முதல்வராக இருங்கள் என்று ஓபிஎஸிடம் சொன்னவர் தான் இந்த தங்கமணி. முதல்வர் பதவியைப் பெருந்தன்மை உடன் விட்டுக் கொடுத்தவர் ஓபிஎஸ். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்.
மோசமான அரசியல்
ஒரு உறுதிமொழிகளைக் கூட நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஒற்றை தலைமை கற்பனை என்றும் இரட்டை தலைமையே தொடரும் என்றும் குறிப்பிட்டார். இருப்பினும், சில நாட்களில் திட்டமிட்டு மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஒற்றை தலைமை வேண்டும் என்று பேச வைத்தனர். இந்தக் கட்சி ஒன்றும் எடப்பாடி சொத்து இல்லை. அதிமுகவுக்கு என மரியாதை இருக்கிறது. அதைக் கெடுக்கும் வகையில் அவர்கள் செயல்படுகிறார்கள்.
எல்லாம் தெரியும்
கொஞ்ச நாட்கள் பொறுத்து இருங்கள். வரும் நவ.21க்கு பின் பல முன்னாள் அதிமுக அமைச்சர்களின் உண்மை நிலை தெரிய வரும். தாங்கள் வழக்கில் சிக்கக் கூடாது என்பதற்காகப் பேரம் எல்லாம் பேசியவர்கள் அவர்கள். இது மக்களுக்குத் தெரிய வந்தால் என்ன ஆகும். இதன் காரணமாக ஒபிஎஸ், திமுக அரசு தனது கடமையைச் செய்யட்டும் என்றார். தவறு செய்யவில்லை என்றால் நான் நிரபராதி என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தைரியமாகச் சொல்லட்டுமே!
41 ஆயிரம் கோடி மர்மம்
அவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டனர். குற்றச்சாட்டுகள் வந்தால் தாங்கள் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. 41 ஆயிரம் கோடி ரூபாய் என்று நான் சொல்கிறேன். ஓபிஎஸ் அனுமதிக்குத் தான் வெய்டிங். அவர் அனுமதி அளித்தால் 41 ஆயிரம் கோடி ரூபாய் மர்மத்தை வெளியிட்டுவிடுவேன். அப்போது எடப்பாடி குறித்த உண்மைகள் நாட்டு மக்களுக்குத் தெரிய வரும்" என்று அவர் தெரிவித்தார்.