உஷார்.. உஷார்.. உஷார்.. ஊரு இரண்டு பட்டால் 'கூத்தாடி'க்கு கொண்டாட்டம்.. பரபரக்கும் போஸ்டர்!
ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு வேண்டுகோள் விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: "ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. உஷார்.. உஷார்.. உஷார்" என போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் பரபரக்கிறது.
தமிழக அரசியல் தற்போது சூடு பிடித்து உள்ளது. தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பல பிரச்சனைகள் இருந்தாலும், இன்னொரு புறம் உட்கட்சி பூசலில் அதிமுக சிக்கி உள்ளது.
ஏற்கனவே இந்த 3 வருடங்களில் முதல்வர், துணை முதல்வர் இடையே புகைச்சல் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட்டை ஒதுக்கியது முதல், நிர்வாகிகள் வரை தனித்தனி கோஷ்டியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த சமயத்தில்தான் தங்க தமிழ்செல்வனின் விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. அமமுகவில் அவருக்கு பிரச்சனை என்றதும், எங்கே தாய்க்கழகத்தில் இவர் இணைந்து விடுவாரோ என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "துரோகிகளை இணைக்காதே" என்று போஸ்டர்கள் அதிமுக தரப்பில் ஒட்டப்பட்டன. ஆனால் தங்க தமிழ்செல்வன் தற்போது திமுக பக்கம் போய் விட்டார்.
இந்நிலையில் மீண்டும் சில பரபரப்பு போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. அதில், "உஷார்.. உஷார்.. உஷார்.. ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்... அஇஅதிமுக எஃகு கோட்டை.. இதுவே புரட்சி தலைவர், புரட்சி தலைவி, ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் பொது வாக்காளர்களின் கட்டளை... கழகத்தின் இரு கண்கள் "காலத்தை வென்ற ஈபிஎஸ்", "காவியத்தலைவர் ஓபிஎஸ்" என்று அச்சிடப்பட்டுள்ளது.
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று திமுகவை மறைமுகமாக சொல்வது இந்த போஸ்டர் மூலம் தெரிந்தாலும், இபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றாக சேர்ந்து கட்சியை நடத்த வேண்டும் என்பதுதான் இவர்களின் பிரதான நோக்கமாகவும், விருப்பமாகவும் தெரிகிறது.