போதி தர்மர் மாவட்டம்.. மோடிக்கு விஷ்ணு பிரசாத் வைத்த டைமிங் கோரிக்கை
Recommended Video
சென்னை: புதிதாக உருவாகும் மாவட்டத்திற்கு போதி தர்மர் மாவட்டம் என பெயரிடுமாறு காங்கிரஸ் செயல் தலைவரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் விஷ்ணு பிரசாத் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விஷ்ணு பிரசாத் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சீன அதிபருடன் தமிழ்நாட்டில், குறிப்பாக மாமல்லபுரத்தில் நீங்கள் நடத்த உள்ள சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் மகாபலிபுரம் பற்றிய சில உண்மைகளை கூறுவது எனது பிரதான கடமையாகும். பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் மகாபலிபுரத்தின் பிரதான அம்சம் ஆகும்.
5வது நூற்றாண்டில், இப்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மகாபலிபுரம் மாவட்டத்தில் பல்லவ ராஜாவிற்கு 3வது இளவரசராக பிறந்தவர் போதி தர்மர். பல்லவ இராச்சியம் நிறுவப்பட்ட காஞ்சீபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. போதி தர்மர் ஒரு இளவரசனாகப் பிறந்திருந்தாலும், அவர் துறவை தேர்ந்தெடுத்து பவுத்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, பவுத்த மடாலயத்தின் 28 வது தலைவரானார். பின்னர் அவர் சீனாவுக்குச் சென்று தற்காப்புக் கலைகளின் தந்தையானார் மற்றும் ஜென் எனப்படும் பவுத்த மத பிரிவை நிறுவினார். சீனாவின் புகழ்பெற்ற பவுத்த பிக்குகளில் ஒருவராக மாறினார்.
முதலில் ஒரு இந்தியராகவும், ஒரு தமிழராகவும் நீங்கள் சீன அதிபரை சந்திப்பதற்காக இந்த மகாபலிபுரத்தை தேர்ந்தெடுத்ததில் பெருமைப்படுகிறேன். போதி தர்மர் தமிழர், அவர் இந்திய பகுதியில் பிறந்தவர். அவர் தனது சித்தாந்தத்தையும் பவுத்த மதத்தின் கொள்கைகளையும் நிறுவி, சீனாவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமராக நீங்கள் அதை முன்னோக்கி எடுத்துச் சென்று போதி தர்மரின் முக்கியத்துவத்தையும் அவரது போதனைகளையும் நிறுவ வேண்டிய நேரம் வந்துவிட்டது.
போதி தர்மர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்தியாவில் எங்காவது ஒரு சர்வதேச கலாச்சார மற்றும் மருத்துவ பல்கலைக்கழகத்தை நிறுவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மகாபலிபுரம் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மாநில அரசால் சமீபத்தில் இரண்டாக பிரிக்கப்பட்டது. எனவே புதிதாக உருவாகும் மாவட்டத்திற்கு போதி தர்மர் மாவட்டம் என பெயரிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் ஒரு அடையாளமாக இருக்கும் போதி தர்மரின் சிலையை திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஷ்ணு பிரசாத் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் இப்போது எந்த ஒரு மாவட்டத்திற்கும் தலைவர்கள் பெயரிட்டு அழைப்பது கிடையாது. உதகமண்டலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரு மாவட்டங்களை தவிர, பிற அனைத்து மாவட்டங்களுமே, அதனதன் தலைநகரங்களின் பெயரில்தான் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், உதகமண்டலம் மாவட்டத்தின் தலைநகர் ஊட்டி.