மக்களே.. அது நம்மை நோக்கிதான் வந்துகிட்டு இருக்கு.. எண்ணூரில் ஏற்றப்பட்டது 1ம் எண் புயல் கூண்டு
சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அந்த அளவுக்கு மழையை பரவலாக கொடுக்கவில்லை.
இதனால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. தற்போது பனியின் தாக்கம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. அது போல் சில இடங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நங்கூரம் பாய்ச்சிய தாழ்வு மண்டலம்..கிறிஸ்துமஸ் நாளில் கனமழை..புயல் கூண்டு ஏற்றம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையில் இருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
லேசான லேசானது முதல் மிதமான மழை
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை மாலை வரை மேற்கு - வடமேற்கு திசையிலும், அதன்பிறகு மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து பிப்ரவரி 1-ம் தேதியன்று காலை இலங்கை கடற்பகுதிகளைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்
மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை இலங்கை மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
65 கிமீ வேகத்தில் காற்று வீசும்
பிப். 1-ஆம் தேதி, இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். பிப். 2-ஆம் தேதி, இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
புயல் எச்சரிக்கை கூண்டு
மேலே குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றாம் எண் எச்சரிக்கை
* பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகிறது. பகல் வேளைகளில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகளும் இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகாள் ஆன புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்படும்.
* ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு என்றால் கடலுக்குள் ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதை குறிப்பிடுவதாகும். ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகங்கள் பாதிக்கப்படாமல் பலத்த காற்று வீசும் என்று பொருளாகும்.
கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படும்
* 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகி உள்ளது என்பதை எச்சரிப்பதற்காக ஏற்றப்படும்.
* 3-ஆம் ஆண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் திடீர் காற்றோடு மழை பெய்யும் நிலை என துறைமுகத்திற்கு எச்சரிக்கை விடுப்பது ஆகும். இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் படகுகள், கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தப்படும்.
கடலுக்குள் செல்லக்கூடாது
* 4-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகம் மற்றும் கடல் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதை குறிக்கும். இந்த புயல்கூண்டு ஏற்றப்பட்டால் மீனவர்கள் மற்றும் கப்பல்கள் கடலுக்குள் செல்லக்கூடாது.
* 5- ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் கடலுக்கு இடது பக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதாகும். 6 என்றால் வலது பக்கமாக கரையைக் கடக்கும். 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆபத்து அதிகம் என எச்சரிக்கை விடுப்பதை குறிக்கும்.
11 ஆம் எண் கூண்டு என்றால்..
* 8 எண் கூண்டு ஏற்றப்பட்டால் மிகுந்த அபாயம் என்பதை எச்சரிக்கும். அதாவது புயல், தீவிர புயலாகவோ அதி தீவிர புயலகாவோ உருவாகி துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்பது பொருளாகும்.
* 9 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் மிகுந்த அபாயம் என்பதை எச்சரிக்கும். அதாவது புயல், தீவிர புயலாகவோ அதி தீவிர புயலகாவோ உருவாகி துறைமுகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்பது பொருளாகும்.
* 10 ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் அதி தீவிரபுயல் உருவாகியுள்ளது என்றும் துறைமுகம் அருகே கடந்து செல்லும் போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை குறிக்கும். 11 ஆம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது என்றால் மிகவும் அபாயத்தை குறிக்கும் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த எச்சரிக்கை குறிக்கும்