வரலாற்றில் ஹஜ் யாத்திரையில் தாக்கத்தை ஏற்படுத்திய தொற்றுநோய்களும்... போர்களும்... !
சென்னை: கொரோனா வைரஸ் தாக்கத்தால் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் வழக்கமான கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்பு தொழுகை (தராவீஹ்), இஃப்தார் போன்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு அவரவர் வீடுகளிலேயே செய்துகொள்ளுமாறு உலகம் தழுவிய அளவில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் மெக்காவில் ஆண்டு முழுவதும் மேற்கொள்ள கூடிய உம்ரா வழிபாட்டிற்கும் காலவரையின்றி சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளதுடன் ஹஜ் யாத்திரைக்கும் இந்த ஆண்டு தடை விதிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது.
ஆனால் இது தொடர்பான வரலாற்றை சற்று புரட்டிபார்த்தோம் என்றால், இதற்கு முன்னரும் பலமுறை தொற்றுநோய், போர், உள்ளிட்ட காரணங்களால் இஸ்லாமிய பெருமக்களின் வழிபாடுகளில் குறுக்கீடு ஏற்பட்டதை அறியலாம்.
முன்னெப்போதும் இல்லாத
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றன. கோடிக்கணக்கான மக்கள் வேலையின்மை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். உலகம் தழுவிய அளவில் அனைத்து பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 3 பில்லியன் மக்களுக்கும் மேல் உலகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக தங்கள் வீடுகளிலேயே முடங்கிகிடக்கின்றனர்.
ரமலான் மாதம்
ரமலான் என்றாலே இஃப்தார் விருந்தும், இரவு நேர சிறப்புத் தொழுகையும் இஸ்லாமியர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இந்தாண்டு கள யதார்தத்தை உணர்ந்து ஒரு புதிய அணுகுமுறையில் ரமலான் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுகின்றனர். இதனிடையே கடந்த 1400 ஆண்டுகளில் கூட்டுப்பிரார்தனைகள் இல்லாமல், சமுதாய ஒன்றுகூடல் இல்லாமல் ஒருவரை ஒருவர் பார்க்காமல் வித்தியாசமான முறையில் ரமலானை எதிர்கொண்டுள்ளனர்.
கர்மாத்தியான் (Qurmatian raid 930)
930-ம் ஆண்டு, அப்பாஸிய ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்த (ஷியாக்களின் ஒரு பிரிவினரான ) கர்மாத்தியன் பழங்குடியினர், ஹாஜிகளின் மீது தாக்குதலில் ஈடுபட்டதால், ஹஜ் இடைநிறுத்தப்பட்டது. ஹஜ் கிரியைகள் சிலை வழிபாட்டை ஒத்தவை என்பது கர்மாத்தியன் பழங்குடிகளின் நம்பிக்கையாக இருந்தது. அந்த தாக்குதலில் 30 ஆயிரம் ஹாஜிகளை கர்மாத்தியன்கள் கொன்று அழித்த நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு என கூறுகிறார், அயர்லாந்து இஸ்லாமிய மையத்தின் தலைமை இமாமான உமர் அல் காதிரி.
மேலும், புனித மெக்கா நகரில் உள்ள கஃபாவில் பதிக்கப்பட்டிருந்த ஹஜரல் அஸ்வத் எனும் சுவர்க்கத்து கருங்கல்லை திருடிக் கொண்டு, அன்று அவர்களின் தலைமையிடமாக இருந்த ஹஜ்ருக்கு (இன்றய கதீப் ஏரியா) கர்மாத்தியன்கள் தப்பிச் சென்ற வரலாற்றையும் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் உமர் அல் காதிரி விளக்கியுள்ளார். இவர்களின் கொடுஞ்செயலால், அப்போது சுமார் 10 வருடங்களுக்கு ஹஜ் நிறுத்தப்பட்டதாகஅவர் கூறினார்.
கொள்ளை நோய்
இதேபோல் 19-ம் நூற்றாண்டில் காலரா தொற்றுநோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியதால் லட்சக்கணக்கானோர் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதன் காரணமாக 1830 மற்றும் 1846 -ம் ஆண்டுகளில் காலரா நோய் காரணமாக ஹஜ் யாத்திரை தடைசெய்யப்பட்டது. 1830 முதல் 1930 வரையிலான நூறு ஆண்டுகளில் குறைந்தது 27 முறையாவது மெக்காவில் காலரா நோய் பாதிப்பு ஏற்பட்டது.
2 வாரங்கள் மூடல்
கடந்த 1979-ம் ஆண்டு 400 முதல் 500 நபர்களை கொண்ட சவுதி ஆயுதக் குழு மஸ்ஜித் அல் ஹரம் என்றழைக்ககூடிய கிராண்ட் மசூதியை கைப்பற்றியது. இதையடுத்து சுமார் 2 வாரங்களுக்கு மசூதி மூடப்பட்டது. அப்போதைய சவுதி அரேபியா மன்னர் காலித் பின் அப்துல் அஜீஸ் ஆட்சிக்கு எதிராக இந்த ஆயுதக் குழு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது. அந்த குழுவுக்கு சயீஃப் அல் ஓட்டாய்பி தலைமை தாங்கினார். பின்னர் பிரெஞ்சு படையின் தந்திரமான நடவடிக்கையால் சவுதி ஆயுதக் குழுவிடம் இருந்து கிராண்ட் மசூதி மீட்கப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர்.
எபோலா வைரஸ்
கடந்த 2010-ம் ஆண்டின் முற்பகுதியில் கண்டறியப்பட்ட எபோலோ வைரஸ், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாடுகளை சேர்ந்த மக்களுக்கு ஹஜ் யாத்திரைக்கான விசாவை தடை செய்தது சவுதி அரேபியா அரசு. அந்த வகையில் கினியா, லைபீரியா, சியாரா லியோனை சேர்ந்த மக்கள் ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடுகளை கடந்த 2014-ல் மேற்கொள்ள முடியவில்லை.
தொழுகைகள் ரத்து
உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த இஸ்லாமிய நகரான அலெப்போ சிரியாவில் இருக்கிறது. அங்கு கடந்த 2016-ல் நிகழ்த்தப்பட்ட வான் வழித்தாக்குதல்களால் வெள்ளிக்கிழமை ஜும் ஆ உள்ளிட்ட அனைத்து தொழுகைகளும் ரத்து செய்யப்பட்டன. குண்டு மழைகளில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையாக, மசூதிகளில் இருந்து அலெப்போ நகர மக்கள் சிறிது காலம் விலகி இருக்க வேண்டும் என சிரியாவின் மதச்சபைகள் வேண்டுகோள் விடுத்தன.
நபிகளார் போதனை
" ஒரு பகுதியில் கொள்ளை நோய் ஏற்பட்டதாக கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள்; உங்களது பகுதியில் ஏற்பட்டால் அங்கிருந்து வெளியேறவும் வேண்டாம்" என்பது நபிகளாரின் போதனை.
இதனால் ஏதோ இந்தாண்டு மட்டும் தான் இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகளில் குறுக்கீடுகள் ஏற்படுவதாக கருத வேண்டாம் என்றும், இதற்கு முன்னரும் பல்வேறு காலகட்டங்களில் இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதை வரலாற்றுச் சான்றுகள் நிரூபிப்பதாகவும் கூறுகிறார், கத்தாரில் உள்ள ஹமாத் பின் கலீஃபா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முத்தாஸ் அல் கதீப்.