கே.பாக்யராஜுக்கே இப்படின்னா.. உதவி இயக்குனர்களின் எதிர்கால கதி.. அடேங்கப்பா.. பயந்து வருதே!
பாக்யராஜ் தனது பதவியை ராஜினாமா செய்ய காரணம் என்ன?
Recommended Video
சென்னை: கே. பாக்யராஜ் என்னும் மாபெரும் கலைஞனுக்கு தமிழ் சினிமா கொடுத்துள்ள மரியாதையும், கவுரவமும் இவ்வளவுதானா என கேட்க வைத்துவிட்டது அவரது சங்க பதவி ராஜினாமா!
நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என அனைத்து திறமைகளையும் ஒரு சேர பெற்றவர் கே.பாக்யராஜ். 80'களில் இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என்ற பெயரை பெற்றவர். இன்றும் அந்த பெயரை தக்க வைத்து கொண்டும் இருப்பவர். திரைக்கதை அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆளுமையே இன்றுவரை அவர் பேசப்படுவதற்கு காரணம்.
திரைக்கதையை நம்பியவர்
இவரிடம் எந்தவித பாசாங்குகளும் பார்க்க முடியாது. ஒட்டுமொத்தமான யதார்த்தவாத இயக்குனர். பெரிய பெரிய நடிகர், நடிகைகளை இவர் எப்போதுமே நம்பியதில்லை. தன்னை ஒரு முற்போக்கு மற்றும் அறிவுஜீவியாகவும் காட்டிக் கொண்டதேயில்லை. பிரம்மாண்டம் என்ற வர்த்தக சொல்லுக்கு அடிபணியாமல் தன்னையும், தன் திரைக்கதையையும் மட்டுமே நம்பி களத்தில் இறங்கி அதில் வெற்றியும் கண்டவர். அதனால்தான் எம்ஜிஆரின் கலையுலக வாரிசாக இவர் ஒருவரே ஆட்சி செய்து வருகிறார்.
[சர்கார் விவகாரத்திற்கு பிறகு அசவுகரியம், ஒழுங்கீனத்திற்கு ஆளானேன்.. பாக்யராஜ் பரபரப்பு அறிக்கை]
பாக்யராஜை இழந்துவிட்டதா?
பொதுவாக பாக்யராஜ் என்றாலே யாருமே அவரை தனித்து ஒதுக்கி பார்க்க மாட்டார்கள். தங்களில் ஒருவராக பார்க்கும் மனோபாவம்தான் தமிழக மக்களுக்கு நிலைத்திருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட பாக்யராஜ் இன்று தனது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பணியை ராஜினாமா செய்யும் அளவுக்கு என்ன காரணம்? இன்றைய தமிழ் சினிமா பாக்யராஜை இழந்து விட்டதா? அல்லது பாக்யராஜ் தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறாரா?
நியாய தீர்ப்பு
கதை திருட்டு என்றுதான் இந்த பிரச்சனை ஆரம்பித்தது. படத்தைப் பார்க்காமலே பாக்யராஜ் எப்படி அப்படி சொல்லலாம் என்று இயக்குனர் கேட்டார். அப்படியானால் பாக்யராஜ் சொன்ன கதை மட்டும் எப்படி சரியாக இருக்க முடியும் என்பதை சம்பந்தப்பட்ட இயக்குனர்தான் கூற வேண்டும். ஆனால் தன் சங்க பொறுப்புக்கு கண்ணியம் காக்கும்வகையில்தான் பாக்யராஜ் நியாயமாக செயல்பட்டார், பேசினார், அடுத்தடுத்த விஷயங்களிலும் இறங்கினார்.
மரியாதை இல்லையா?
பிரச்சனையை மூடி மறைத்து தீர்க்க பார்த்தார்... ஆனால் சினிமா ஆதிக்கம் கோர்ட் வரை சென்றது... அங்கும் சென்று தன் பக்க நியாயங்களை எடுத்துரைத்தார்... சுமூக முடிவு எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. உண்மையிலேயே சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் கதை தன்னுடையது சொன்ன இயக்குனரையும்விட, அதிகமாக பாதிக்கப்பட்டது பாக்யராஜ்தான். மூத்த கலைஞர் என்ற மரியாதை அவருக்கு தரப்படாமல் போய்விட்டதோ இந்த தமிழ் திரையுலகம் என எண்ண தோன்றுகிறது.
ராஜினாமா ஏன்?
மன ரீதியாக அதிக அளவு சங்கடங்களுக்கு ஆளானார் பாக்யராஜ். ஒரு இயக்குனராக வேண்டாம், சங்க பொறுப்பிலிருந்து இருதரப்பையும் அழைத்து பேசி ஒரு தீர்ப்பை அளித்தால் அதை ஏற்க மறுத்து விவாதிப்பதும், எதிர்ப்பதும், பகிரங்க புகார் அளிப்பதும் பாக்யராஜ்-க்கு எந்த அளவுக்கு அவமானத்தை தேடி தந்திருக்கும் என்பதை யாராவது உணர்ந்தார்களா? இதற்காக எத்தனை பேரிடம் அவர் பழி சொல் வாங்க நேர்ந்தது. எத்தனையோ பேரின் காயப்பட்ட மனங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலைக்கும் ஆளானார்.
உதவி இயக்குனர்களின் கதி?
எல்லோரிடமும் இறங்கிப் போய் பேசும் அளவுக்கு பாக்யராஜ் போனதை திரையுலகம் அமைதியாக வேடிக்கைதான் பார்த்தது. இப்போது பதவியையே ராஜினாமா செய்யும் அளவுக்கு பாக்யராஜூக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கிறதா? அல்லது இந்த மனநிலைக்கு பாக்யராஜ் போக என்ன காரணம்? யார் காரணம்? ஆனானப்பட்ட பாக்யராஜ்-க்கே இந்த கதி என்றால், காலங்காலமாக என்றாவது ஒருநாள் சினிமாவில் ஜெயிப்போம் என்று நிகழ்கால வாழ்வை தொலைத்து நம்பிக்கையுடன் கோடம்பாக்கத்தில் நடமாடி கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான உதவி இயக்குனர்களின் எதிர்கால கதி.. அடேங்கப்பா.. பயந்து வருதே!