"இதை" பார்த்துதான் கட்சிகள் பயந்து விட்டனவாம்.. திருவாரூரில் புதைந்திருக்கும் பரபர பின்னணி!
டிடிவி தினகரன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: கடைசியில் இந்த விஷயத்தில் ரொம்ப பரிதாபம் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான். ஆனால் உண்மையில் தினகரன் ஒரு வகையில் வெற்றியும் பெற்றுள்ளார்.
சசிகலா சிறைக்குப் போன அடுத்த நிமிடத்திலிருந்து லாவகமாக செயல்பட ஆரம்பித்து விட்டார் தினகரன். மறுபக்கம் கருணாநிதி இறந்த பிறகு, இரங்கல் கூட்டம், புதிய தலைவர், பொருளாளர் தேர்வு, அழகிரி பஞ்சாயத்து என்று திமுக பிசியாக இருந்தது. குட்கா விவகாரம், சிபிஐ ரெய்டு என்று அதிமுக பிசியாக இருந்தது. இந்த கேப்பை ரொம்ப அழகாக பயன்படுத்தி கொண்டார் டிடிவி தினகரன்.
திருவாரூர், திருப்பரங்குன்றத்திலேயே டேரா போட்டு கள வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார். மக்களை தினந்தோறும் சந்தித்து பொதுக்கூட்டங்களை நடத்தி, ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற எங்களுக்கு சொந்த மாவட்டத்திலும், பழக்கப்பட்ட மாவட்டத்திலும் வெற்றி பெற மாட்டோமா? என்று கேள்வி எழுப்பினார்.
கட்சிகள் மிரண்டன
இதற்காக இரு தொகுதிகளிலும் எல்லா சுவற்றிலும் குக்கர் சின்னத்தை வரைந்து வைக்க, மற்ற கட்சிகளுக்கு விளம்பரத்துக்கு சுவர்கள் இல்லாதநிலை கூட ஏற்பட்டது. தினகரனின் இந்த நடவடிக்கையை பார்த்து அப்போதே திமுக, அதிமுக கட்சிகள் மிரண்டதாக சொல்லப்பட்டன.
கோர்ட்டுக்கு போவேன்
ரெட் அலர்ட் மழையை கூறி இடைத்தேர்தலை நடத்த தினகரன்தான் முக்கியமான காரணமாக அன்று இருந்தார். இடைத்தேர்தல் தள்ளி வைப்பு என்று கேள்விப்பட்டதும் எகிறி குதித்ததும் தினகரன்தான். இந்த அறிவிப்பை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. இதை எதிர்த்து கோர்ட்டுக்கு போக போகிறேன் என்றுகூட சொன்னார்.
இடைத்தேர்தல்
அதன்பிறகு நம்பிக்கையுடன் தன்னை தானே தேற்றி கொண்டபோதுதான், 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பின் வழக்கு வந்து தலையில் அவருக்கு இடி இறங்கியது. இதையும் சமாளித்து தன்னை தேற்றிக் கொண்டுதான் திருவாரூர் இடைத்தேர்தலுக்கு ரெடி ஆனார்.
அமமுக ஆதரவு
ஆனால் எப்போது இடைத்தேர்தல் அறிவிப்பு என்று ஆணையம் தேதியை சொன்னதோ, அப்போதே கள ரீதியான ஒரு ரிப்போர்ட் அதிமுக, திமுக தயார் செய்ததாக கூறப்படுகிறது. அந்த மறைமுக ரிப்போர்ட்டில், வெற்றி பெறுவதற்கான சாத்திய சூழல் தினகரனுக்குதான் முதலில் இருந்ததாம், இதற்கு அடுத்ததாக திமுக இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஜீரணிக்க முடியவில்லை
இப்படி ஒரு கருத்து கணிப்பு முடிவினை திமுக எதிர்பார்க்கவில்லை. சொந்த தொகுதியிலேயே திமுக இப்படி என்றால் அதிமுக நிலை இன்னும் பரிதாபம். 3-வது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளதாக அந்த ரிப்போர்ட் சொன்னதாம். ஆர்.கே.நகரில் டெபாசிட்டை இழந்ததையே இன்னும் திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை. இதில் சொந்த தொகுதியை தினகரனிடம் இழந்துவிட்டால், அது வரப்போகிற தேர்தலில் இருக்கிற இமேஜை டேமேஜ் செய்துவிடும் என்று யோசித்ததாம்.
ஆர்வம் காட்டவில்லை
அதுவும் இல்லாமல் தினகரன் நிறுத்திய வேட்பாளரும், திமுக வேட்பாளரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். திமுக வேட்பாளரை போலவே தினகரன் வேட்பாளரும் மாவட்டத்திலும், கட்சியிலும் செல்வாக்கு உடையவர்தான். இதனால்தான் தினகரனுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு ரிப்போர்ட்டுகள் அறிவாலயத்துக்கு சென்றதாகவும், இதன் அடிப்படையிலேயே திமுக இடைத்தேர்தலை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தினகரன் அப்செட்
எனவே இடைத்தேர்தல் விஷயத்தில் தினகரன் திரும்பவும் அப்செட்தான் என்று தெரிகிறது. ஆனால் இதன்மூலம் 2 விஷயங்கள் நிரூபணமாகின்றன, ஒன்று, அமமுகவின் செல்வாக்கு வெளிப்பட்டுள்ளது. அவர்தான் உண்மையான அதிமுக என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. இரண்டாவது, இடைத்தேர்தலை இப்படி தள்ளிவைத்து தள்ளி வைத்து போவது தினகரன் மீதான அனுதாபத்தைதான் அதிகமாக கூட்டி வருகிறது. அவருக்கு தனது செல்வாக்கை கூட்டிக் கொள்ள மேலும் அவகாசம் கிடைத்துள்ளதாகவே கருதப்படுகிறது.