"வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் லெஜண்ட் ஆவார்" - தந்தையின் உறுதியான நம்பிக்கை பலிக்குமா?
சென்னை: ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய தனது மகன் வாஷிங்டன் சுந்தர் கண்டிப்பாக ஒரு லெஜண்ட் வீரராக உருவெடுப்பார் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு கிளைமேக்ஸ் ஹீரோவாக ஜொலித்தவர் வாஷிங்டன் சுந்தர். Gabba-வில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வாஷி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தன்னை நிரூபித்தார்.
Recommended Video
பந்துவீச்சில், லெந்த்தில் பல வேரியேஷன்கள் காட்டிய வாஷி, குட் லெந்த்தில் சில பல விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால், அவரது பேட்டிங் தான் எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில், அணி இக்கட்டான நிலையில் இருந்த போது நங்கூரமாய் நின்று 62 ரன்கள் எடுத்ததும், இரண்டாம் இன்னிங்ஸில் அதிரடியாக 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்ததும் இந்திய அணி வெற்றியை உறுதி செய்தது.
இந்நிலையில், வாஷிங்டன் குறித்து அவரது தந்தை சுந்தர் என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், "எனது மகன் குறித்து நான் பெருமைப்படுகிறேன். அதுமட்டுமின்றி, ரவிச்சந்திரன் அஷ்வின், நடராஜனும் நம்மை பெருமைப்பட வைத்துள்ளனர்.
பொதுவாகவே, வாஷி ஒரு தொடக்க பேட்ஸ்மேன். இப்போது தான் தனது பேட்டிங் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
அவரது இந்த செயல்பாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர் நிச்சயம் ஒரு லெஜண்டாக உருவெடுப்பார். அவரிடம் அந்தளவு உயர்வதற்கான ஆற்றல், கடின உழைப்பு, ஒழுக்கம் இருக்கிறது. இந்திய அணியில் அவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாட கடவுள் அவருக்கு துணையிருப்பார் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாஷிங்டன் சுந்தரின் சகோதரி ஷைலஜா சுந்தர் பேசுகையில், "நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே அனுபவித்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம். வாஷிங்டனின் பவுலிங்கை விட அவரது பேட்டிங்கை நான் மிகவும் ரசிப்பேன். ஒரு கிரிக்கெட் போட்டியில் அவரது இரண்டு விதமான பேட்டிங் ஸ்டைலை நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்றார்.
வாஷிங்டனின் தாயார் பேசும் போது, "தினம் அதிகாலை 5 மணிக்கு எழுந்து கிரவுண்டுக்கு சென்று பயிற்சியை முடித்து பிறகு பள்ளிக்குச் செல்வார். மாலை மீண்டும் கடுமையான பயிற்சி மேற்கொண்ட பிறகு தான், தனது பள்ளிப் பாடங்களை முடிப்பார்.
மழை பெய்தாலும் அவருக்கு கண்டிப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். கூட விளையாட அவரது அப்பாவையும், நண்பர்களையும் அழைத்துச் செல்வார். ஒருவேளை அவரை விளையாட அனுமதிக்கவில்லை எனில், வீடே களேபரமாகிவிடும்" என்றார்.