போராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்
சென்னை: தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
உள்ளாட்சித் துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு
வருகின்றனர். குடிநீர் பிரச்சனைக்காக ஜூன் 22 முதல் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தண்ணீர் பிரச்சனையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, மாவட்டம் தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் திண்டாட்டத்தை தீர்க்க கோரி, நேற்று சேப்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. காஞ்சிபுரத்தில் எம்.எல்.ஏ. சுந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது காலிக்குடங்களை வைத்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் இலவச குடங்கள் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பால், குடங்களை வாங்க பெண்கள் உள்ளே நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாமக்கல் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பேரணியாக வந்த தி.மு.க.வினர், பேரூராட்சி அலுவலகம் முன்பு காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் காலிக் குடங்களில் முழக்கங்களை ஒட்டியிருந்தனர்.