தமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி
சென்னை: ஒரு (சென்னை) இடத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சனையை தமிழகம் முழுவதும் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என்று என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.50.8 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பல்வேறு கலை அம்சங்களுடன் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படுகிறது. தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் நடக்கிறது.
கடந்த மே 7-ந்தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்கள். அதை தொடர்ந்து நினைவிடம் கட்டுமான பணிகள் தொடங்கின.
இந்தநிலையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், முதலமைச்சர் பழனிசாமி மரியதை செலுத்தினார். அவருடன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர், ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார், முதலமைச்சர் பழனிசாமி.
ஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார். குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
இயற்கை பொய்த்துவிட்டது; பருவமழை போதிய அளவு பெய்யாததால் மிகுந்த வறட்சி ஏற்பட்டுள்ளது. ஒரு (சென்னை) இடத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சனையை தமிழகம் முழுவதும் இருப்பது போல் மாயை ஏற்படுத்த வேண்டாம் என்றும், இன்னும் 3 மாத காலத்திற்கு நிலத்தடி நீரை எடுத்துதான் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது என்று கூறிய அவர், ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது. இன்னும் 5 மாத காலத்தில் ஜெயலலிதா நினைவு மண்டபத்தின் திறப்பு விழா நடைபெறும் என்றார்.