குடிநீர் தட்டுப்பாடு.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலகுக... கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். குடிநீர் பஞ்சத்தை போக்குவதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழகத்தில் சமீபகாலமாக மக்களை வாட்டி வதைத்து வரும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால், ஆட்சியாளர்கள் விதவிதமான சால்ஜாப்புகளை சொல்லி பொறுப்புகளை தட்டிக்கழித்து வந்தனர்.
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுக்கிற வகையில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது. 'செங்குன்றம் ஏரியில் தண்ணீர் குறைவது முன்பே தெரியாதா? தமிழக அரசிடம் நீர் மேலாண்மை திட்டமே இல்லை, தமிழகத்தில் எந்த நீர்நிலைகளிலும் தூர் வாரப்படவில்லை" என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் எந்த புதிய நீர்ப்பாசன திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. எந்தளவுக்கு நீர் எடுக்கிறோமோ, அந்தளவுக்கு மழையின் போது நீர் வந்து சேர வேண்டும். அதை செய்வது தான் நீர் மேலாண்மை.
சென்ற ஆண்டு மழையின் போது மட்டும் சுமார் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. இதையெல்லாம் தடுத்து நீரை சேமிப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் நிறைவேற்றிய திட்டம் என்ன? ஒதுக்கிய நிதி எவ்வளவு ? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக பேசிய அவர், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என்று விமர்சனம் செய்தார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் பொய் சொல்லி இருக்கிறார். பக்கத்து மாநில முதல்வர்களை சந்தித்து 2 டி.எம்.சி. நீரையாவது தமிழக அரசு கேட்டுப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.