தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன?... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜெய்ஸ்ரீராம் என முழங்கி ஒவைஸியை சீண்டிய பாஜக எம்பிக்கள்.. பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
தண்ணீர் பிரச்சனை
குடிநீருக்காக, மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். அலுவலகங்களுக்கு விடுமுறை போட்டு விட்டு, தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. பல ஐடி நிறுவனங்கள் அலுவலங்களை மூடிவிட்டு, வீட்டில் இருந்தே பணியாற்றும் படி, கேட்டுக்கொண்டுள்ளனர்.
தண்ணீர் அரசியல்
நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. தண்ணீர் பஞ்சத்தால், இன்னும் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். அதே நேரம், தண்ணீர் பிரச்சனை அரசியல் பிரச்சனையாகவும் மாறியுள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி, மாறி புகார்களை முன்வைத்து வருகின்றனர். சென்னையில் தினமும் 9,000 முறை லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. விளம்பரத்திற்காக சில இடங்களில் அரசியல் கட்சியினர் குடிநீர் விநியோகிக்கின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
துரித நடவடிக்கை
இதற்கிடையே, தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மீஞ்சூர், நெம்மோலி ஆலைகளில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள்
மேலும், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கண்டனத்தை பதிவு செய்தனர்.
ஒரு வாரம் கெடு
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஏரி, குளங்களை தூர்வாரவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் எடுத்த நடவடிக்கை என்ன? மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் கெடு விதித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.