சென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்!
Recommended Video
சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் அடுத்த வாரம் தண்ணீர் வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர் நிலைகள் அனைத்தும் வறண்டுவிட்டன. இதனால் மக்கள் தண்ணீர் தேடி காலிக்குடங்களுடன் அலைகின்றனர். விவசாயக் கிணறுகள், கல்குவாரியில் இருக்கும் நீரை கொண்டு வந்து தண்ணீர் தேவையை தமிழக அரசு பூர்த்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர்
எடுத்து வரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.
இதற்காக ரூ. 65 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னையிலிருந்து சென்ற அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் ஆய்வு நடத்தினர்.
ஜோலார்பேட்டை மேட்டு சக்கரக்குப்பத்தில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தரைமட்ட நீர்த் தேக்க தொட்டி, பார்சம் பேட்டை மற்றும் கேதாண்டப்பட்டி ரெயில்வே கேட் அருகில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளை 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு பரிந்துரையின் பேரில், ரெயில்வே நிர்வாகம் குடிநீர் எடுத்து செல்ல இதுவரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே ஜோலார்பேட்டையில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் எடுக்கும் பணிகள் நாளை அல்லது நாளை மறுதினம் தொடங்கப்படவுள்ளது என தெரிகிறது.