ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு...கிருஷ்ணா தண்ணீர் திறப்பு...இரண்டு நாட்களில் தமிழகம் வந்தடையும்!
சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் இருக்கும் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி இரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை தண்ணீர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., கடந்த 1983ல் அப்போது ஆந்திரா முதல்வராக இருந்த என்.டி.ராமாராவுடன் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் மேற்கொண்டார்.
அதன்படி கண்டலேறு அணையிருந்து பூண்டி ஏரிக்கு சுமார் 177 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. ஆந்திராவில் 152 கிலோ மீட்டரிலும், தமிழகத்தில் 25 கிலோ மீட்டரிலும் கால்வாய் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் வழங்க வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின்படி 1996ல் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 25 முதல் ஜூன் 24 வரை ஒரே தவணையில் சாதனை அளவாக 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டு இருந்தது..
கொரோனாவிலிருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கு பாஸ்.. சீனா அசத்தல் தகவல்
இந்த நிலையில், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதை தொடர்ந்து திருப்பதியில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்திலும் தமிழக அதிகாரிகள் பங்கேற்று வலியுறுத்தினர்.
இதையடுத்து, கடந்த 14ஆம் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று ஆந்திரா அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். நேற்று காலை 9 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது கண்டலேறு அணையில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் வருகிற 21 ஆம் தேதி இரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடையும். இங்கு இருக்கும் தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடைந்து மறுநாள் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 16.60 அடியாக இருந்தது. 59 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.