உச்சத்தில் தண்ணீர் பஞ்சம்.. அரசு எச்சரிக்கையை மீறி அரை நாள் விடுமுறை அளித்த தனியார் பள்ளி
Recommended Video
சென்னை: தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியாததால் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, அரை நாள் மட்டுமே செயல்படுகிறது.
மழை பொய்த்ததால் மாநிலம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ள நிலையில், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் பலவும் மாணவர்களுக்கு உரிய தண்ணீரை விநியோகிக்க முடியாமல் திணறி வருகின்றன.
இதனால் பள்ளிகள் துவங்கிய சில நாட்களிலேயே போதிய தண்ணீரின்றி பள்ளி கழிவறைகள் மூடப்பட்டன மேலும் மாணவர்களுக்கு தேவையான குடிநீரையும் பள்ளி நிர்வாகங்களால் விநியோகிக்க இயலவில்லை எனவே பல பள்ளிகள் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி ஓரிரு நாட்கள் விடுமுறை அறிவித்தன
மேலும் பல பள்ளி நிர்வாகங்கள் தங்களது வேலை நேரத்தை குறைத்து காலை 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும்படி நடவடிக்கை எடுத்தன.
தண்ணீர் பிரச்சனை காரணமாக தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிகழ்வு தேசியளவில் கவனம் பெற்றது. இதனையடுத்து தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் அல்ல, தண்ணீர் பற்றாக்குறையே நிலவுவதாக தொடர்ந்து கூறி வரும் தமிழக அரசு, தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியின் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டையில் அமைந்துள்ளது விவேகானந்தா வித்யாலாயா சிபிஎஸ்இ பள்ளி.
இந்த பள்ளி தான் அரசின் உத்தரவையும் மீறி, அரை நாள் விடுமுறை அளித்துள்ளது. தண்ணீர் பிரச்சனையை முன்னிட்டு பள்ளியின் வேலை நேரம் அரை நாள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வரும் நிலையில், கடந்த வாரமே திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பள்ளி அரை நாள் மட்டுமே செயல்படும் என பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி எந்த ஒரு தனியார் பள்ளிகளும் விடுமுறை அறிவிக்க கூடாது என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்திருந்தார். அதையும் மீறி இன்று மற்றும் நாளை இரு தினங்களும் அரை நாள் தான் இயங்கும் என விவேகானந்தா வித்யாலாயா பள்ளி நிர்வாகம் அறிவித்தது.
கூறியபடியேஇன்று மத்தியம் 12 மணிக்கு மேல் பள்ளியிலிருந்து மாணவர்களை வீட்டுக்கு திருப்பிய அனுப்பப்பட்டுள்ளனர். அரை நாள் விடுமுறை என்பதால், பெற்றோர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து விடுப்பு எடுத்து கொண்டு, மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பெற்றேர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போய்விட்டதாக கூறினர். 4 முதல் 5 பேர் இருக்கும் வீடுகளிலேயே தண்ணீர் பற்றாக்குறையால் கடுமையான சிரமத்தை சந்திக்க நேர்கிறது. அப்படி இருக்கும் போது ஆயிரக்கணக்கில் படிக்கும் மாணவர்களை கொண்ட பள்ளியில், தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பது எளிதானதல்ல என்றே கூறினர்.
மூன்று மடங்கு விலை கொடுத்து தண்ணீர் வாங்க தயாராக இருந்தாலும், லாரி தண்ணீர் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. நிலைமை இப்படியிருக்க அரசு கெடுபிடி காட்டுவது சரியல்ல என்றும் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.