கோடைகாலத்தில் தேர்தல் வச்சா என்னாவது.. காத்திருக்கும் தண்ணீரில் கண்டம்.. அலறும் அதிமுக!
சென்னை: கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். அந்த சமயத்தில் லோக்சபா தேர்தலை நடத்தினால் அது தங்களுக்குப் பாதகமாகும் என்ற அச்சத்தில்தான் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் லோக்சபா தேர்தலை நடத்த வேண்டும் என்று அதிமுக அரசு தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் இந்தியா முழுவதும் 6 அல்லது 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வாக்குகளை பெற வியூகம் அமைப்பதிலும் அதி தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான திமுக தனது அணியில் இந்த இந்த கட்சிகள் இருக்கும் என்று ஓரளவுக்கு தெரிவித்து விட்ட நிலையில் அதிமுக இன்னமும் தடுமாறி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி முடிவாகிவிட்டது என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதிமுகவோ அல்லது பாஜகவோ இன்னும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே தோல்வி பயம் காரணமாக இடைதேர்தல்களையும் உள்ளாட்சி தேர்தலையும் அதிமுக - தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் ஒத்தி வைத்து வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் மே மாதம் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதால் தேர்தலை தமிழகத்தில் முதற்கட்டமாகவே நடத்தி முடித்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அதிமுக மக்களவை தலைவர் வேணுகோபாலும் இந்த மனுவை தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளனர்.
அதிமுக இப்படி ஒரு மனுவை தேர்தல் ஆணையத்தில் அளித்திருப்பதன் பின்னணியில் தேர்தல் பயம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 28- ம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் மே மாதம் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். காரணம் பருவ மழை பொய்த்ததால். குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடும் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
மதுரையில் இப்போதே குடிநீர்ப் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. நகருக்குள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே நிலத்தடி நீர் சுத்தமாக வற்றிப் போய் விட்டது. மக்கள் தண்ணீருக்கு அலை பாயும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசின் மீது மக்களின் கோபம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில்கூறப்பட்டுள்ளது. இந்த கோபம் அதிமுக மீதான அதிருப்தியாக மாறி வாக்குகளை பாதிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருதுகிறாராம்.
ஆகவேதான் பல கட்டங்களாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் முதற்கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று அதிமுக கருதுகிறதாம். அதற்காகத்தான் அதிமுக சார்பில் இப்போது தேர்தல் ஆணையத்தில் இப்படி ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆக தங்களுக்கு தண்ணீரிலும் கண்டம் இருப்பதாக அதிமுக கருதுவது வெளிப்படையாக தெளிவாகிறது