குடிநீர் பஞ்சம் தலைவிரித்தடுகிறது... மாநிலம் முழுவதும் கோவில்களில் மழை வேண்டி யாகம்
சென்னை: பருவமழை பொய்த்து போனதால், தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர், கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், கடும் வறட்சி நிலவுகிறது. சென்னை உட்பட, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், நிலத்தடி நீர், அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், மழை வேண்டி, அனைத்து கோவில்களிலும் சிறப்பு யாகம் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிரசித்தி பெற்ற கோவில்களில், மழைவேண்டி யாகம் நடத்தப்பட உள்ளது.
கல்லோ மண்ணோ எதை கலந்து ரசகுல்லா கொடுத்தாலும் அது எனக்கு மகா பிரசாதம்.. மம்தாவுக்கு மோடி கவுன்ட்டர்!
கடும் குடிநீர் தட்டுப்பாடு
தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டு வருகிறது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அறநிலையத்துறை முடிவு
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், அதுவரை குடிநீர் பிரச்னையை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மழை வேண்டி யாகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர், செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
மழை வேண்டி யாகம்
அதில், வரும் 2019-20ம் ஆண்டு விகாரி வருடத்தில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிக்க இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி கீழ்க்கண்ட நிகழ்ச்சிகளை தத்தம் பிரிவில் உள்ள கோவில்களில், அந்தந்த கோவில்களின் பழக்கவழக்கத்திற்கு உட்பட்டு நடத்திட அனைத்து செயல் அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறப்பு அபிஷேகம்
பர்ஜன்ய சாந்தி வருண ஜெபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல், அருள்மிகு நந்திப் பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், ஓதுவார்களை கொண்டு சுந்தர மூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை ஓதுதல், திருஞான சம்பந்தர் இயற்றிய 12ம் திருமுறையில் தேவார மழை பதிகத்தை கேரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல். நாதஸ்வரம், வயிலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்தல்.
சிவன் கோவில்களில் பூஜை
சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாரா பாத்திர நீர் விட்டு செய்தல், சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல், மகா விஷ்ணுவிற்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல், மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல், மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல், நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருப்புன்கூர் சிவன் கோயிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல், வருண சூக்த வேதமந்திர பாராயணம் செய்தல், வருண காயத்ரி மந்திரம் பாராயணம் செய்தல், மேற்கண்டவாறு அந்தந்த கோவில்களின் பழக்கவழக்கத்திற்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட, இந்த நிகழ்வு தொடர்பான கற்றறிந்தவர்களை தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோவில் அலுவலர்களை கேட்டு கொள்ளப்படுகிறது.
பட்டியல் விவரம்
மேலும், தங்கள் மண்டலத்தில் எந்தெந்த கோவில்களில் எந்த தேதியில் மழை வேண்டி யாகம் செய்யப்பட உள்ளது என்பதற்கான விவரத்தை பட்டியலிட்டு தொகுத்து உடன் மே 2ம் தேதிக்குள் அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் தெரிவிக்கவும், அவ்வாறு யாகம் நடத்தப்பட்ட விவரத்தை யாகம் முடிந்தவுடன் தனியே தெரிவிக்கவும் அனைத்து மண்டல இணை ஆணையர்களையும் கேட்டு கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.