தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு... விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடிவு
சென்னை: தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை சுற்று வட்டாரத்தில் உள்ள 316 விவசாய கிணறுகளில் இருந்து ஓரிரு நாட்களில் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு வரும் நிலையில், தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கல்குவாரி நீர் நிலைகளை கண்டறிந்தது, சுத்திகரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால், மக்கள் தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். அலுவலகங்களுக்கு விடுமுறை போட்டு விட்டு, தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. பல ஐடி நிறுவனங்கள் அலுவலங்களை மூடிவிட்டு, வீட்டில் இருந்தே பணியாற்றும் படி, கேட்டுக்கொண்டுள்ளனர்.
குடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்
நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. தண்ணீர் பஞ்சத்தால், இன்னும் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில், சென்னையின் குடிநீர் தேவைக்காக, வீராணம் ஏரியில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டர் தண்ணீரும், மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் லிட்டர் தண்ணீரும் எடுக்கப்படுகிறது.
பூண்டியிலிருந்து 55 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சென்னையின் குடிநீர் தேவைக்காக பெறப்பட்டு வருகிறது. மேலும்,140 விவசாயக்கிணறுகளில் இருந்து 55 மில்லியன் லிட்டர் தண்ணீரும் பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அளவு போதாது என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 316 விவசயாக்கிணறுகளில் இருந்து நீர் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு கோடை காலத்தில் 8 ஆயிரம் லாரிகள் கொண்டு விநியோகிக்கப்பட்ட தண்ணீர் இந்தாண்டு 9 ஆயிரத்து100 லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுவதாகவும் மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் அரசின் சார்பாக எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நடப்பாண்டில் ஏரி, குளங்களை விவசாயிகள் பங்களிப்போடு தூர்வாரும் குடிமராமத்து பணிகளுக்கு 499.கோடியே 68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகளுக்காக கடந்த 2017ம் ஆண்டு 100 கோடி ரூபாயும், கடந்தாண்டு 331 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.