மழை பெய்ய வேண்டும்... தண்ணீர் பஞ்சம் தீர வேண்டும்... சென்னை தனியார் பள்ளியில் யாகம்
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, வழிபாடு நடத்தினர்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் குடிநீருக்காக மக்கள் தவித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னையில் குடிநீர் பஞ்சம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்க நினைத்தாலும், தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. போர்களிலும் தண்ணீர் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இதனிடையே, குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்துவர முடிவு செய்துள்ளது. இதேபோல் மற்ற ஊர்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் லாரி உரிமையாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சில இடங்களில் குடிநீர் தேவைக்கு, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை என்று கூறி, பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே நேரம், தண்ணீர் பஞ்சத்தை போக்க, மழை பெய்ய வேண்டி அதிமுக சார்பில், கோவில்களில் யாகம் வளர்க்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.