சென்னையை வாட்டி வதைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு.. சமாளிக்க முடியாமல் வீடுகளை காலி செய்யும் மக்கள்!
Recommended Video
சென்னை: சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை சமாளிக்க முடியாமல் மக்கள் தங்களின் வீடுகளை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிகவும் குறைந்தளவே மழை பெய்தது.
பருவ மழை பொய்த்து போனதால் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீநர்மட்டம் குறைந்துள்ளது. இதன்காரணமாக குடியிருப்புகளில் உள்ள கிணறுகள் வற்றிபோயுள்ளன. நீர் எடுக்கும் மோட்டார்களும் நிலத்தடி நீர்மட்டம் வறண்டதால் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
10 நாளா தண்ணி இல்லை.. எப்படிதான் பொழப்பு ஓட்டுறது.. கும்பகோணத்தில் குடங்களுடன் ஆவேச சாலை மறியல்
வெளியூர் மக்களே அதிகளவு
அதிக மக்கள் வசிக்கும் சென்னையில் குடி நீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். சென்னையில் பணி நிமித்தமாக வெளி மாவட்டங்களையும் வெளி மாநிலங்களையும் சேர்ந்த மக்களே அதிகளவு வசித்து வருகின்றனர்.
நகர்ப்புறங்களில் அதிக தட்டுப்பாடு
பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வாடகை வீடுகளிலேயே மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் புறநகர் பகுதிகளை காட்டிலும் நகர்புறங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பிரச்சனையில்லை
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையில் சொல்லிக்கொள்ளும்படி தண்ணீர் பிரச்சனை ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவு பெய்யாததால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
அத்தியாவசிய பணிகள்
அன்றாட தேவைகளான குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்குக்கூட மக்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தும் நிலையே ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான குடியிருப்புகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் லாரியில் விலைக்கு வாங்கியே அன்றாட தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
தனியார் தண்ணீர் லாரிகள்
பல இடங்களில் தண்ணீர் லாரிகளுக்கும் தண்ணீர் கிடைக்காததால் தனியார் லாரிகள் ஒரு டேங்கருக்கான விலையில் திடீரென 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கூட்டியுள்ளன. இதனால் ஒரு டேங்கர் தண்ணீர் பெற 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை செலுத்து வேண்டியுள்ளது.
கையை கடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு
ஒரு மாதத்திற்கு குறைந்தது 4 முறையாவது டேங்கர் லாரிகளில் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளதால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு லாரிகளில் தண்ணீர் வாங்கி பயன்படுத்துவதை சமாளிக்க முடியவில்லை. தண்ணீருக்கான செலவு கையை கடிப்பதால் வீட்டின் உரிமையாளர்களும் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர்.
வீடுகளை காலி செய்யும் மக்கள்
சென்னை வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் நகர் பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்துவிட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். மக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தனியார் தண்ணீர் லாரிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.