வாட்டர் கேன் உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்.. வாட்டர் டேங்கர் ஸ்டிரைக் தொடர்கிறது
Recommended Video
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்து வந்த வாட்டர் கேன் நிறுவன உரிமையாளர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், வாட்டர் டேங்கர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் புறநகர்களில் பெருமளவில் நிலத்தடி நீரை சுரண்டி எடுத்து நகர்ப்புறங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.
கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் சென்னை நகருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 20,000 டிரிப்புகளுக்கும் மேலாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படி பெருமளவில் தண்ணீர் எடுப்பதால் நிலத்தடி நீர் வற்றிப் போகும் அபாயம் புறநகர்களில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
ஹைகோர்ட் தடை
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தண்ணீர் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தண்ணீர் லாரி நிறுவனங்கள் அப்பீல் செய்தன. ஆனால் முன்பு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க ஹைகோர்ட் மறுத்து விட்டது. இந்த நிலையில்தான் தற்போது தண்ணீர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
மக்களுக்குப் பாதிப்பு
இதனால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் தண்ணீரை நம்பித்தான் பாதி சென்னையே உள்ளது. எனவே இந்த ஸ்டிரைக்கால் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்போர், ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். லாரி ஸ்டிரைக் நீடித்து வருவதால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளிட்ட வணிக வளாகங்களும் மூடப்பட்டு வருகின்றன.
ஐடி நிறுவனங்கள் அவதி
குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளன. பல ஐடி நிறுவனங்கள் நிலைமை மேலும் மோசமானால் தங்களது பணிகளை வேறு நகரங்களுக்கு மாற்றுவது குறித்த ஆலோசனைகளில் குதித்துள்ளன.
அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
நிலைமை மோசமாகி வருவதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி என்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் கலந்து கொண்டார்.
அமைச்சர் அளித்த பேட்டி
இந்த ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், மாலை 4 மணிக்கு டேங்கர் லாரி உரிமையாளர்களுடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படும். மெட்ரோ வாட்டர் நிறுவனம் மூலம் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
50-50
இதையடுத்து இன்று மாலை பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வாட்டர் கேன் நிறுவன உரிமையாளர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம், தண்ணீர் எடுப்பதற்கான விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்படாத காரணத்தால் வாட்டர் டேங்கர் அதாவது தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடரும் என அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் சென்னை மக்கள் சந்தித்து வரும் குடிநீர்ப் பிரச்சினை முழுமையாக தீரும் வாய்ப்பு தள்ளிப் போயுள்ளது.