வேலூரிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு செல்வதை எதிர்க்கவில்லை.. துரைமுருகன் விளக்கம்
சென்னை: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக வெளியான தகவலுக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து தலைநகர் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வது பற்றிய தனது கருத்து, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக தமிழகம் முழுவதும் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையை கண்டித்து, திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
அப்போது பேசிய அவர் தண்ணீர் பிரச்சினை குறித்து சட்டசபையில் திமுக எடுத்துரைக்கும். ஆளும் அரசிடம் மக்கள் முறையிடுகிறார்கள். ஆனால் அரசோ ஆண்டவனிடம் முறையிடுகிறது. கடவுளிடம் முறையிடுவதன் மூலம் தண்ணீரை பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அரசு ஒப்புக் கொண்டுள்ளது என பேசினார்
மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால், போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் பேசியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தலைநகர் சென்னைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கூறினால் பிறகு கர்நாடகாவை நாம் எப்படி தண்ணீர் கொடுக்குமாறு கேட்க முடியும் என வினவினார். காலை முதலே துரைமுருகனின் பேச்சு பற்றி பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் எனது கருத்தை திரித்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல துரைமுருகன் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என தவறாக பிரச்சாரம் செய்துள்ளன என துரைமுருகன் கூறியுள்ளார்.
ஒரு தவறான பிரச்சாரத்தை துவக்கி அதன் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயலுவதை வன்மையாக கண்டிப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி கூட்டு குடிநீர் திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம் வரை பல ஊர்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைத்து கொண்டிருந்த தண்ணீரானது, தற்போது இரு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் சூழல் நிலவி வருகிறது. எனவே ஜோலார்பேட்டையை தவிர வேறு இடத்திலிருந்து, சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்லலாம் என்று கூறினேன். ஆனால் சில ஊடகங்கள் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போக துரைமுருகன் எதிர்ப்பு என தவறாக தலைப்பிட்டு செய்தியை பரப்பியுள்ளனர்.
மேலும் பற்றாக்குறையுடன் கிடைக்கும் காவிரி நீரை மறித்து சென்னைக்கு கொண்டு போனால், வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தான் தாம் கூறியதாக துரைமுருகன் தற்போது விளக்கமளித்துள்ளார்.