நான் பனங்காட்டு நரி.. இதுபோன்ற சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்.. தெறிக்கவிடும் துரைமுருகன்
சென்னை: நான் பனங்காட்டு நரி, இதுபோன்ற சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் என்று ரெய்டு குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பேசி இருக்கிறார்.
நேற்று திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றது. தேர்தல் பறக்கும்படை பிரிவினர் இந்த சோதனையை நடத்தினார்கள்.
நேற்று சுமார் 14 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் கடைசியில் எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று துரைமுருகன் தரப்பு தெரிவித்து இருக்கிறது. சுமார் 40 அதிகாரிகள் துரைமுருகனுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை செய்தனர்.
என்ன பேசினார்
இதுகுறித்து தற்போது திமுக பொருளாளர் துரைமுருகன் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார். அதில், நான் பனங்காட்டு நரி, இதுபோன்ற சலசலப்புக்கு அஞ்சமாட்டேன். நாங்கள் வெற்றிபெற்று விடுவோம் என்று பயந்து இதுபோன்ற ரெய்டுகளை ஏவி விடுகிறார்கள். இதற்கு பின் யார் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
தேடல்
எங்கள் வீட்டில் 24 மணிநேரமாகக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு, எங்கேயாவது தவறு இருக்கிறதா, ஏதாவது பொருள் கிடைக்குமா என்று தேடி தேடிப் பார்த்தார்கள். ஆனால் பாவம் அவர்கள் தேடி பார்த்தது எதுவும் கிடைக்கவில்லை. கல்லூரியில் மட்டுமே சுமார் 12 மணி நேரம் சோதனை செய்தார்கள். அப்போதும் எதுவும் கிடைக்கவில்லை.
மெண்டல் டார்ச்சர்
எங்களுக்கு சோதனை மூலம் தொல்லை கொடுக்க அவர்கள் நினைக்கிறார்கள். மெண்டல் டார்ச்சர் மூலம் அவர்கள் எங்களை வழிக்கு கொண்டு வரலாம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. எங்களுக்கு எந்த விதமான அச்சமும் இந்த அரசு மீது கிடையாது.
கடைசி
கடைசியில், கணக்கு வழக்குகள் சரியாக இருக்கிறது என்று அவர்களே சொல்லிவிட்டார்கள். எங்களிடம் எந்த விதமான தவறான ஆவணமும் இல்லை. நீங்கள் சட்டத்தை மீறவில்லை என்று கூறினார்கள். அதோடு, சோதனையில் நாங்கள் எந்தப் பொருளையும் கைப்பற்றவில்லை, என்றும் எழுதிக் கொடுத்துவிட்டு வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் சென்றுவிட்டனர், என்று துரைமுருகன் கூறியுள்ளார்.