இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வெல்வோம்.. தங்க தமிழ்ச்செல்வன் திட்டம்
20 தொகுதியில் இடைத்தேர்தலை சந்திக்க தயார், அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயார் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் பேட்டி அளித்தார்.
சென்னை: 20 தொகுதியில் இடைத்தேர்தலை சந்திக்க தயார், அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய தயார் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் பேட்டி அளித்தார்.
கடந்த வாரம் 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று டிடிவி தினகரன் அறிவித்து இருக்கிறார். தேர்தலை சந்திக்க தயார் என்று தினகரன் திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் சென்னையில் பேட்டி அளித்தார்.
அதில், டிடிவி தினகரன் எங்களுக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. எங்களை நீக்கியது அதிமுகவினர்தான். அதனால்தான் நாங்கள் தினகரன் பக்கம் நிற்கிறோம்.
நாங்கள் மேல்முறையீடு செய்ய தயாராக இருந்தோம். ஆனால் நாங்கள் காலம் தாழ்த்த விரும்பவில்லை. அதனால்தான் நாங்கள் மக்கள் மன்றத்தை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.
முடிந்தால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறட்டும். அதிமுகவிற்கு எதிராக அமமுக மாபெரும் வெற்றிபெறும். நாங்கள் அதிமுகவின் அவல ஆட்சியை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம்.
நாங்கள் எம்எல்ஏ அறைகளை காலி செய்து வருகிறோம். அதை காலி செய்வதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. காலி செய்ய ரூபாய் 80 ஆயிரம் பணம் கேட்டனர். வாடகை பணத்தையும் கொடுக்க தயார்.
தேவர் பூஜையின் போது நாங்கள் எந்த அதிமுக போஸ்டரையும் கிழிக்கவில்லை. உங்களுக்கு பவர் இருக்கும் வரை பேசுவீர்கள், நாங்கள்தான் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவோம், என்று குறிப்பிட்டுள்ளார்.