மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை... ஒரே போடாக போட்ட கே.எஸ் அழகிரி... காரணம் என்ன?
சென்னை: சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, தங்களுக்கு மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை என்றும் கூட்டணி குறித்து வேறு யாரிடமும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் வரும் மே மாதம் 2ஆம் தேதி ஐந்து மாநிலங்களுக்கும் ஒன்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இன்னும் சில நாட்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தேதியும் தொடங்கவுள்ளதால், தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் படு வேகமாக மேற்கொண்டு வருகிறது. அதிமுக தற்போது வரை பாமகவுடன் தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்!
திமுக கூட்டணியில் இழுபறி
மறுபுறம் திமுக மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக ஆகிய மூன்று கட்சிகளுடன் மட்டுமே கூட்டணியை உறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் கூட்டணி இழுபறியிலேயே இருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் தான் தர முடியும் என்று திமுக தெரிவித்துள்ளது, காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங். ஆலோசனை
இது குறித்து ஆலோசனை நடத்தக் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். திமுக மிகக் குறைவான தொகுதிகளை ஒதுக்குவதால் கமலின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று சில காங்கிரஸ் நிர்வாகிகள் யோசனை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, தங்களுக்கு மூன்றாவது அணியின் மீது நம்பிக்கை இல்லை என்றார். மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த திமுக தரப்பிலிருந்து அழைப்பு வரவில்லை என்றும் கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை நாளை நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தையில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உண்மைக்குப் புறம்பானது
முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்வும் இதே கருத்தையே முன் வைத்தார். மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசுவதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என்றும் கூட்டணி குறித்துப் பரவும் வதந்திகளுக்கும் யூகங்களுக்கும் பதில் அளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், திமுக உடனான தொகுதிப் பங்கீடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதாவது திமுக உடனான கூட்டணியே தொடர வேண்டும் என்பதே கட்சி தலைமையில் விரும்புகிறது. இருப்பினும் குறைவான இடங்களையே தரும் என்பதால் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ராகுல் காந்தி சர்ச்சை
கன்னியாகுமரியில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடிய போது, அவர் தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டதால் தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பிரசாரத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இது குறித்துப் பேசிய கே,எஸ் அழகிரி, "பாஜகவின் சர்வாதிகாரப் போக்தைத இது காட்டுகிறது, அது வரும் தேர்தலில் தகர்க்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை ராகுல் காந்தி மீறவில்லை. அவர் அங்கு யாரிடம் வாக்கு கேட்கவில்லை" என்றார்