ஓபிஎஸ்-இபிஎஸ்-ஐ ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்துள்ளோம்: உயர் நீதிமன்றத்தில் அதிமுக பதில்
ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒருங்கிணைப்பாளர்களாக முறைப்படி தேர்வு செய்யப்பட்டதாக அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக மெமோ தாக்கல் செய்துள்ளது. வழக்கில் ஓபிஎஸ்-இபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டு ஜன.3 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை, தாக்கு: அமமுகவினர் மீது போலீஸ் வழக்குப்பதிவு
அதிமுக தேர்தலை எதிர்த்து மற்றொரு வழக்கு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், நாளை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உட்கட்சி தேர்தல் நடத்தும் முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற கட்சி விதிகள் முறையாக பின்பற்றபடவில்லை. இயற்கை நீதிக்கு எதிராக தேர்தல் அறிவிக்கபட்டுள்ளது. இதனால் கட்சி உறுப்பினர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.
பதவியை தக்க வைத்துக்கொள்ள தேர்தல்
மேலும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தங்களுடைய பதவியை தக்க வைத்துக்கொள்ளும் உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்துள்ளது தவறு. எனவே, கட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யவும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட தடைவிதிக்க வேண்டும்" என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
தேர்தல் முடிவுக்கு தடை கோரி வழக்கு
இந்த வழக்கு இன்று உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கட்சியின் உறுப்பினர்களை முறைபடுத்தவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை என்பதால் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதிமுக உறுப்பினரல்லாதவர் வழக்கு
அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய நாராயணன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி மனுதாரர் அதிமுகவில் இருந்து திமுக சென்று அதன் பின் அமமுகவில் இருந்து விலகி தற்போது சசிகலாவுடன் இருப்பதாகவும், அதனை மனுவில் மறைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனுதாரர் கட்சியின் உறுப்பினரே இல்லை என்றும், அவர் இந்த வழக்கு தொடர உரிமையில்லை என தெரிவித்தார்.
ஓபிஎஸ்-இபிஎஸ் போட்டியின்றி தேர்வு என மனு
மேலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓ.பி.எஸ்.மற்றும் ஈ.பி.எஸ்.போட்டியின்றி தேர்வு செய்யபட்டதாக மெமோ தாக்கல் செய்யப்பட்டது.
ஓபிஎஸ்-இபிஎஸ்சுக்கு நோட்டீஸ்
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் நடவடிக்கைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அணுகலாம் என அறிவுறுத்திய நீதிபதி, மனு தொடர்பாக அதிமுக மற்றும் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் விரிவான விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்