சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்
சென்னை: சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை எனவும், ஆன் லைன் குற்றங்களை தடுப்பது குறித்து மட்டுமே விசாரிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, ஆன் லைன் குற்றங்கள் தொடர்பாக காவல் துறையினர் கேட்கும் விவரங்களை வழங்குவது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்தது.
உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரிக்கை
இந்நிலையில், சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்றத்துக்கு அறிவுரை
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதாரை கட்டாயமாக்க கோரிய வழக்கை விசாரிக்கலாம் என்றும் இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியிருந்தது.
விசாரணையை தள்ளிவைக்க
இந்த பின்னணியில், சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை இணைக்க கோரிய வழக்கு, நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது பேஸ்புக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகில் ரோஹத்கி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முடிவு எட்டும் வரை இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரிக்கை விடுத்தார்.
ஆன் லைன் குற்றங்கள்
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால் விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் என வாதிட்டார். சமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து விசாரிக்கவில்லை என்றும், ஆன் லைன் குற்றங்களை தடுப்பது குறித்து மட்டுமே விசாரிப்பதாகவும் விளக்கமளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 19 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.