நீதித்துறை நெருக்கடியில் உள்ளதாக அறிவிக்க நேரிடும்.. தமிழக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் கண்டனம்!
தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கை விசாரிப்பதை பார்த்தால், மொத்த நீதித்துறையையும் நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க தோன்றுகிறது என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கை விசாரிப்பதை பார்த்தால், மொத்த நீதித்துறையையும் நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க தோன்றுகிறது என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளுக்கு நாள் தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கும் இடையேயான பிரச்சனை உச்சம் அடைந்து வருகிறது. சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது போலீசார், அரசு அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அடுக்கடுக்காக புகார் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக புகார்களை அடுக்கினார். அதில், தமிழக அரசு தனக்கு அறை எதுவும் ஒதுக்கவில்லை, சிலை கடத்தல் பிரிவின் அலுவலக சாவியை கேட்டால் கூட கொடுப்பதில்லை.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் தனி அலுவலகம் இல்லாமல் தெருவில் நிற்கிறார்கள் என்று புகார் அளித்தார். தமிழக அரசு வேண்டும் என்றே விசாரணையை முடக்க பார்க்கிறது என்றார்.
இதை கேட்டு கோபம் அடைந்த சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. அதில், சிலை கடத்தல் வழக்கு தொடுக்கப்பட்டதில் இருந்தே அரசின் செயல்பாடு சரியாக இல்லை
இப்படியே போனால் நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும். பொன்.மாணிக்கவேலுக்கு ஏன் இன்னும் அலுவலகம் ஒதுக்கவில்லை. 50 நாட்களாகியும் இன்னும் அலுவலகம் அமைக்கப்படவில்லை.
ஓய்வு பெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும் நிலையில் சிறப்பு அதிகாரி ஏன் தொடர கூடாது. சிலைகடத்தலை தமிழக அரசு சரியாக கையாளவில்லை. இதை பார்க்கும் போது நீதியும், நீதித்துறையும் நெருக்கடியில் இருப்பதாக அறிவிக்க தோன்றுகிறது, என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.