EXCLUSIVE: கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.. எதுவும் நம்மை அண்டாது.. வலியுறுத்தும் கீ ஸ்டோன்!
உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்று வருகிறது.
Recommended Video
சென்னை: "நம் கைகளை சுத்தமா வெச்சுக்கிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை தீண்டாது" என்று சொல்கிறார் வினிதா. யார் இந்த வினிதா? கைகளை கழுவ சொல்லி வேண்டுகோள் விடுக்கும் நோக்கம் என்ன?
தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார மேம்பாட்டு உறுதுணை திட்டத்தின் (TNUSSP) கீழ் பங்காற்றி வரும் கீஸ்டோன் அறக்கட்டளையின் ஒருவராக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதுகுறித்து "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது வினிதா பேசும்போது தெரிவித்தாவது: "பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் (BMGF) தமிழ்நாட்டின் சுகாதார திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு தொழில்நுட்ப உதவி பிரிவு (TSU) அமைத்து நகராட்சி ஆணையம் மற்றும் நீர் வழங்கல் துறைக்கு ஆதரவளிக்கிறது.
மனித கழிவுகள் சுத்திகரிப்பு
இந்த பிரிவு நகர்ப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மாநிலத்திற்கு ஆதரவளிப்பதோடு, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையம் ஆகிய இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி இடங்களில் சுகாதார முழு சுழற்சியில் பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக மனித மலக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல், அதனை எடுத்துச் செல்லுதல் மற்றும் மனித கழிவுகளை முறையாக சுத்திகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
செய்முறை விளக்கம்
இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோனில் நேற்று முதல் 3 நாட்களுக்கு அதாவது 16-ந் தேதி வரையில் சர்வதேச கைகழுவுதல் தினத்துக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஹேண்ட் பிரிண்ட் அதாவது வண்ணங்களின் மூலம் கை அச்சுக்களை பதிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மேலும் சுகாதார விழிப்புணர்வு பாடல் மூலம் முறையாக கை கழுவுதல் பற்றிய செய்முறை விளக்கமும் இதில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
வீதி நாடகங்கள்
இதை தவிர, இன்றும் நாளையும், குடிசைப் பகுதிகளுக்கு சென்று வீதி நாடகங்களை அரங்கேற்றி அதன்மூலம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி போகிறோம். இதற்காக பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள விவேகானந்தபுரம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் போன்ற குடிசைப்பகுதிகளை தேர்ந்தெடுத்தும் இருக்கிறோம். மக்களுக்கு சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதே எங்கள் ஒரே நோக்கம்" என்று சொல்லி முடித்தார் வினிதா.
வண்ண வண்ண கைகள்
கை கழுவும் தினத்தை இவ்வளவு சிறப்பான முறையில் விழிப்புணர்வு நடத்தி மக்களிடம கொண்டு சேர்க்க முயலும் கீஸ்டோன் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்களைதான் அவசியம் சொல்ல வேண்டும்!! வெள்ளை நிற பரந்து விரிந்த துணியில் வண்ண வண்ண நிறங்களால் பொதுமக்கள் தங்கள் கைவிரல்களை பதித்து இந்த விழிப்புணர்வில் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது!!