விஜய்க்கு எதிராக பாஜக போராடவில்லை.. அவர் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது.. எச். ராஜா விளக்கம்!
நடிகர் விஜய்க்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை, விஜய் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜய்க்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை, விஜய் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்கள் முன்பு தமிழகம் முழுக்க 38 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.
நடிகர் விஜய் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா பேட்டி அளித்துள்ளார்.
சிஏஏ போராட்டங்கள்
எச். ராஜா தனது பேட்டியில், தமிழகத்தில் நடக்கும் சிஏஏ போராட்டங்கள் காசு கொடுத்து நடத்தப்படுகிறது. மத ரீதியாக திட்டமிட்டு திமுக செயல்பட்டு வருகிறது. சிஏஏ குறித்து திமுக பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகிறது. இதற்கு எதிராக நடத்திய கையெழுத்து போராட்டத்தில் நிறைய முறைகேடு நடந்துள்ளது. மக்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குகிறார்கள்.
மக்கள் விருப்பம்
முக்கியமாக பாதிரியார்களை நிர்பந்தப்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வாங்குகின்றனர். சிவ வழிபாட்டை கேலி செய்த சீமான் பெருவுடையார் கோவிலுக்கு சென்றது ஏன்? சிவனை குறித்து அவர்த்தான் தவறாக பேசினார். இப்போது அவரே கோவிலுக்கு சென்று இருக்கிறார். தமிழக அரசியல் வேகமாக மாறி வருகிறது.
விஜய்
விஜய் பெரிய ஆள் கிடையாது. அவருக்கு எதிராக நாங்கள் ஏன் போராட்டம் நடத்த வேண்டும். பாஜக சார்பாக எங்கும் விஜய்க்கு எதிராக போராட்டம் நடக்கவில்லை. விஜயை நாங்கள் ஒரு ஆளாக மதிப்பது கிடையாது. நெய்வேலி சுரங்கம் பொது சொத்து. அங்கு ஷூட்டிங் நடத்தவே எதிர்ப்பு தெரிவித்தோம். விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு நாங்கள் காரணம் இல்லை.
கருப்பு பணம்
அவர் சரியாக வரி கட்டி இருந்தால் வருமான வரி சோதனைக்கு அச்சப்பட தேவையில்லை. சினிமா உலகத்தில் கருப்பு பண முதலீடு அதிகரித்துள்ளது. சினிமா துறையில் நிறைய முறைகேடுகள், மோசடிகள் நடந்து வருகிறது வருமான வரித்துறை சோதனைகள் இதை தடுக்கும். இதில் அரசியல் காரணம் எதுவும் இல்லை, என்றார்.