சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்திற்கு வர பிரார்த்தனை செய்கிறோம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சென்னை: சசிகலா குணமாகி நல்ல முறையில் தமிழகத்துக்கு வர இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா வரும் 27-ந் தேதி விடுதலையாகிறார். சசிகலா தமிழகத்துக்கு வந்தாலும் அதிமுகவில் அவரை சேர்க்கப்போவது இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென கொரோனா பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உறவினரான இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.
இதனிடையே சசிகலா குணமடைந்து நல்ல முறையில் தமிழகத்துக்கு வர வேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருக்கிறார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மினி கிளினிக்குகள்
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து பெண்களுக்கு மருத்துவ பெட்டகங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:
கொரோனா தடுப்பூசி
ஜனவரி 31ம் தேதிக்குள் திருவேற்காட்டில் 15 மினி கிளினிக்குகளும் திறக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 51 மினி கிளினிக்குகள் திறக்கப்படும். முதல் கட்ட கொரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு உள்ளது.
தடுப்பூசி போட தயார்
அடுத்த கட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போடப்படும். தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் ஊசி போட்டுக் கொண்டுள்ளார். டாக்டர் என்ற அடிப்படையில் அவர் போட்டுக் கொண்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போடும்போது நாங்கள் முதல் வரிசையில் நின்று போட்டுக் கொள்வோம்.
சசிகலாவுக்காக பிரார்த்தனை
பிரேசில் நாட்டு அதிபர் இந்தியாவுற்கு நன்றி சொல்கிறார். இங்கு உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்வினை ஆற்றி கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவது அநீதி. கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடை பிடித்தால் 2 மாதங்களில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் ஆகிவிடும். பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் அடுத்த அலை உருவாக வாய்ப்பாக அமைந்துவிடும். அதனைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சசிகலா விரைவில் குணமாகி நல்லமுறையில் தமிழகத்திற்கு வர வேண்டும் என இதயப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.