நாங்க ஸ்டிரைக் பண்ணல .! ஆனா நாளை முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது.. உரிமையாளர்கள் தகவல்
சென்னை: நாளை முதல் தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் ஓடாது என தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் நிஜலிங்கம், தனியார் தண்ணீர் லாரிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வலியுறுத்தினார்.
தண்ணீர் லாரிகளை அதிகாரிகள் சிறைப்பிடிப்பதும், ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாக உள்ளது.இது தொடர்பாக பலமுறை முயற்சித்தும் அமைச்சரை சந்திக்கமுடியவில்லை என்பதால் இதற்கு தீர்வு காண ஆலோசிக்கப்பட்டது
மேலும் தனியார் லாரிகள் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால், தங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மற்றும் டிராக்டர்களை நாளை முதல் இயக்க போவதில்லை என்றும் நிஜலிங்கம் அறிவித்தார்.
தண்ணீர் எடுக்க அதிகாரிகள் பயங்கர கெடுபிடி செய்வதாலும், தண்ணீர் போதிய அளவு கிடைக்காமல் உள்ளதாலும் எங்களால் தொழிலை சாிவர செய்ய முடியவில்லை.எனவே தான் நாளை முதல் தண்ணீர் லாரிகளை இயக்க போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளோம்.
நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இது வேலைநிறுத்தம் அல்ல, தண்ணீர் எடுப்பதற்கே இடமில்லை. இருக்கின்ற இடங்களிலும் தண்ணீர் எடுக்க அதிகாரிகள் மிக கெடுபிடி காட்டுகின்றனர்.எனவே தொழிலை செய்ய இயலாததால் தற்காலிகமாக தண்ணீர் லாரிகளை இயக்காமல் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தண்ணீர் இருக்கும் இடத்தை அரசே எங்களுக்கு காட்டினால் நாங்கள் தண்ணீர் எடுத்து லாரிகளை நிறுத்தாமல் இயக்குவதாக கூறியுள்ளார். எனினும் இது தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மறைமுகமான வேலைநிறுத்த போராட்டமாகவே பார்க்கப்படுகிறது.
தலைநகர் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து வரும் நிலையில், தனியார் தண்ணீர் லாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்,
தனியார் தண்ணீர் லாரிகளை நம்பியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ஐடி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்டவை கடும் பாதிப்புகளை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.