இன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
Recommended Video
சென்னை: பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின், இனி யாரும் பேனர் வைக்க கூடாது என்றும், மீண்டும் இது போல் தவறு நடக்கக்கூடாத அளவுக்கு தவறுக்கு காரணம் ஆனவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையைச் சேர்ந்த ஐடி பெண் ஊழியர் சுபஸ்ரீ கந்தன் சாவடியில் இருந்து வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பள்ளிக்கரணை வழியாக சென்ற போது சுபஸ்ரீயின் மீது, பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி சுபஸ்ரீ மீது மோதி ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார். சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அவர், சுபஸ்ரீயின் தந்தை ரவி மற்றும் தாய் கீதாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேற்று நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மக்ளுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கட்அவுட் பேனர் உள்ளிட்டவை வைக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளோம். இது ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு சுபஸ்ரீயை இது போல் நாம் இழக்கக்கூடாது. என்னதான் ஆறுதல் சொன்னாலும் சுபஸ்ரீயின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது.
செய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்!
எனவே கண்டிப்பாக பொதுமக்களும் சரி, திராவிட முன்னேற்ற கழகத்தினரும் சரி பிளெக்ஸ் பேனர் உள்ளிட்ட கட்அவுட் வைக்க கூடாது மற்ற அனைத்து கட்சியினரும் சரி இனி யாருமே பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்ற தீர்க்கமாக இருக்க வேண்டும். பள்ளிக்கரணை சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. திருமணம் முடிந்து 3 நாட்கள் ஆகியும் பேனரை எடுக்காமல் இருந்திருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும். மீண்டும் இது போல் தவறு நடக்கக்கூடாத அளவுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்" என்றார்.