"ஏன்யா.. இதுக்கெல்லாம் வருத்தப்படுவியா.. போய்ட்டே இருக்கணும்.. கெத்து காட்டிய இளையராஜா
இளையராஜா தன்னம்பிக்கை குறித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: "கடந்து வந்த வாழ்க்கைக்கு வருத்தப்பட முடியுமா? அதுக்கெல்லாம் இப்போ வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது.. எல்லா சவால்களையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்" என்று இளையராஜா நம்பிக்கை வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.
பலவித பிரச்சனைகளுக்கு நடுவில், கோர்ட் கேஸ் என்று எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், கோடம்பாக்கத்தில் எம்எம் திரையரங்க வளாகத்தை இளையராஜா விலைக்கு வாங்கி இருக்கிறார்..
இந்த புது ஸ்டுடியோவில், தன்னுடைய முதல் ரெக்கார்டிங் வேலையையும் ஆரம்பித்துவிட்டார்... விஜயசேதுபதி படத்துக்கு மியூசிக் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், விஜயசேதுபதி உட்பட பலர் இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்னார்கள்.
பேட்டி
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது இளையராஜா மனம் திறந்து சில விஷயங்களை சொன்னார்.. அப்போது, "ஜெமினி ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோ, கோல்டன் ஸ்டுடியோ, ஏவிஎம் ஸ்டுடியோ, விஜயா கார்டன் ன்னு இதெல்லாம் அன்னைக்கு இருந்தது.. இப்போ பல ஸ்டுடியோக்கள் இல்லை... இந்த லிஸ்ட்டில் பிரசாத் ஸ்டுடியோவும் சேர வேண்டும் என்றுதான் வெளியே வந்துட்டேன்.
ஸ்டுடியோ
என் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை வைத்து, இந்த இடத்தை வாங்கி, ஸ்டுடியோவை ஆரம்பிச்சிருக்கேன்.. மாறிக்கொண்டே இருக்கும் இந்த சினிமாவில், தலைமுறைகளை கடந்து இசை சொல்ல வேண்டும் என்பதற்காகதான் இந்த ஸ்டுடியோ ஆரம்பமாகிறது.
பிரசாத் ஸ்டுடியோ
"40 வருஷமா பிரசாத் ஸ்டுடியோவில் இருந்தீங்களே, வருத்தமாக இருக்கிறதா சார்?"என்ற கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு இளையராஜா, "ஏன்யா.. நடந்த வாழ்க்கைக்கு வருத்தப்படுவியா நீ? வாழ்க்கையிலே எவ்வளவோ கடந்து வந்திருக்கேன்.. அதுக்கு வருத்தப்பட்டுட்டு இன்னைக்கு வேலை செய்வியா? செய்ய முடியாது.. அது அது வருது போகுது, அவ்வளவுதான்..
சவால்
மேலே போய்ட்டே இருக்கே. அப்போ மழைவிழுது.. மறுபடியும் போய்ட்டே இருக்கே, காக்கா எச்சில் போடுது.. என்ன பண்ணுவே? எல்லாம் எதிர்கொள்ளணும்.. எல்லாம் சவால்தான்.. மனுஷனுக்கு இடைஞ்சல் அவ்ளோ இருக்கு.. அதிலயும் முன்னேறியவனை தடுக்கிறதுக்கு எவ்வளவோ இடைஞ்சல் வரும்.. நம்ம வேலையை முயற்சியோடு செய்யும்போது நாம அடையற இடமே வேற.." என்றார் ராஜா.