மேகதாது திட்டத்தால் தமிழகத்துக்கு பாதிப்பா என்பதை ஆராய வேண்டும்- ரஜினிகாந்த் ஷாக்கிங் பேட்டி
Recommended Video
சென்னை: மேகதாது அணையால் தமிழகத்திற்கு வரும் நீர் வரத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று தனது இல்லத்தில் நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கூறியதாவது: மேகதாது அணையால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் வரத்தில் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தெரிந்து கொள்ள வேண்டும்
மத்திய அரசு கூறியது எந்த அளவுக்கு உண்மை என்று தெரிந்து கொள்ள வேண்டும். பாதிப்பு இருந்தது என்றால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பூர்வ நடவடிக்கைதான் இதற்கு ஒரே வழி.
ரிசர்வ் வங்கி
பேட்ட திரைப்படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பால் மகிழ்ச்சியடைந்துள்ளேன் என்றார். ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா குறித்த கேள்விக்கு, ஆர்பிஐ ஆளுநர், ராஜினாமா செய்தது ஏன் என்ற உண்மை தெரியாமல் எதையும் சொல்ல முடியாது என்றார் ரஜினிகாந்த்.
சொல்லிட்டேன்
5 மாநில தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு, அதற்கான பதிலை ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்றார் ரஜினிகாந்த். பாஜக செல்வாக்கு குறைந்துள்ளது என்று ரஜினிகாந்த் பேட்டியளித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
கர்நாடகாவிற்கு சாதகம்
மேகதாது அணையால் தமிழகம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ரஜினிகாந்த், அதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ளது கர்நாடக அரசுக்கு சாதகமான கருத்தாக பார்க்கப்படுகிறது.
தொடர் சர்ச்சை
7 தமிழர்கள் யார் என்றது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர் என கூறியது என்ற வரிசையில், இப்போது மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் நிலைப்பாட்டுக்கு முரணாக பேட்டியளித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார் ரஜினிகாந்த்.