பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு! சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க நடவடிக்கை: தமிழக அரசு தகவல்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கினை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் 30ம் தேதி ஆஜராகும்படி, சி.பி.சிஐடி அனுப்பிய சம்மனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் சி.பி.சிஐடி அலுவலகத்தில் ஆஜராக கால அவகாசம் வேண்டும் என்றும் தான் வெளியூரில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும் தன்னிடம் இருக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் நக்கீரன் கோபால் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைப்படும்" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது. அது வரை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
முதல்வர் மகளுக்கு வந்த சோதனை... வாக்குசீட்டு முறையை கொண்டு வந்த விவசாயிகள்
இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில ஆஜராக வேண்டும் என நக்கீரன் கோபாலுக்கு நீதிபதி அனுமதி அளித்தார். மேலும் வழக்கு விசாரணையும் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக மற்றொரு வழக்கு வாசு என்பவர் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கும் நீதிபதி இளந்திரையன் முன்பு நடந்தது. அப்போது மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பணியில் உள்ள நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும், அதில் சமூக நல அமைப்புகள் மற்றும் பெண்கள் இடம் பெற வேண்டும் என கோரினார். இந்த வழக்கில் விசாரணை நிலவரம் என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.