பப்ஜி மதனுக்கு எதிராக பாயப்போகும் புதிய வழக்குகள்.. வங்கி கணக்கை ஆராயும் போலீஸ்.. கமிஷ்னர் பேட்டி
சென்னை: யூடியூபர் மதன் வீட்டில் சோதனை நடத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து, அவரது மனைவியை கைது செய்துள்ளோம்; தலைமறைவாக உள்ள மதனையும் விரைவில் கைது செய்து விடுவோம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலமாக லைவ் சாட்டிங்கில் ஆபாசமாக பேசுவது, பெண்களை இழிவுபடுத்தி பேசுவது, சிறுமிகளிடம் பேசி ஆபாச ஆடியோ உள்ளிட்டவைகளை தனது யூடியூப் சேனலில் வெளியிடும் செயல்களில் மதன் என்பவர் ஈடுபட்டு வந்தார்.
ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
இந்த நிலையில் அவர் மீது சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் யூடியூப் கேம் மதன் குறித்து தற்போது புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து மதனை தேடி வருகிறார்கள். .தொடர்ந்து மதன் தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.அந்த ஆடியோவில் மிக அசிங்கமாக மதன் பேசுவதாக உள்ளது. இந்த ஆடியோ வைரலான பின்னர் பப்ஜி மதனை உடனே கைது செய்ய வேண்டும் என்று சமுக வலைதளங்களில் பலர் குரல எழுப்பினர்.
பப்ஜி மதன் தலைமறைவு
இதையடுத்து பப்ஜி மதனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தேடப்படும் மதன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் சென்னை தனிப்படை காவல்துறையினர் சேலம் விரைந்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த தொடர் விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் புதுதெருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தபோது மதன் வீட்டில் இல்லாமல் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது.
கீர்த்திகா மதன் கைது
பின்னர் அவரது மனைவி கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நேற்று அதிகாலை 6மணி முதல் 8 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மதனின் மனைவி கீர்த்திகாவை கைது செய்த போலீசார் அவரை சென்னைக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்து பல உண்மைகளை அறிய போலீசார் விரும்புகின்றனர். மதன் ஆபாசமாக பேசியது அவரது மனைவி கீர்த்திகாவிடம் தான் என்று கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவரும் பொதுமக்களை ஏமாற்றி சப்ஸ்கிரைபர்களைஅதிகப்படுத்தி கோடிகளை குவித்தது தெரியவந்தது.
வங்கி கணக்கு ஆய்வு
இதையடுத்து யூடியூபர் மதன் வீட்டில் சோதனை நடத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரது வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை பங்குவர்த்தகம் மற்றும் பிட் காயினில் மதன் முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதன் மீது போக்சோ சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
விரைவில் கைது
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் இதுபற்றி கூறுகையில், தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆபாச பேச்சுகளுடன் நேரலை செய்த 'பப்ஜி' மதனைத் தீவிரமாகத் தேடிவருகிறோம். யுடியூபர் மதன் வீட்டில் சோதனை நடத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து, அவரது மனைவியை கைது செய்துள்ளோம்; தலைமறைவாக உள்ள மதனையும் விரைவில் கைது செய்து விடுவோம். சமூக வலைதளக் குற்றங்களை கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது" என்றார்.