ஆளும் அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்... சட்டசபை கூட்டத் தொடரை புறக்கணிக்கிறோம் - மு.க ஸ்டாலின்
ஆளுநரின் செயலை கண்டித்து சட்டசபைக் கூட்டத் தொடர் முழுவதையும் திமுக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: ஆளுநர் உரையை மட்டுமல்ல ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டசபைக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம் என்று திமுக தலைவரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஆளும் அரசின் கடைசி பட்ஜெட் இதுதான் என்றார்.
Recommended Video
இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடியது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபை இன்று காலை 11 மணிக்கு கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், பேரவை கூட்டம் தொடங்கியதும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் ஆங்கிலத்தில் படித்த உரையை சபாநாயகர் தனபால் தமிழில் வாசித்தார்.
ஏழு தமிழர் விடுதலை அறிவிப்பு இல்லை... ஆளுநருடன் கடும் வாக்குவாதம் - திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
எதிர்கட்சியினர் எதிர்ப்பு
சட்டசபைக் கூட்டம் தொடங்கி ஆளுநர் உரையை வாசிக்கும் முன்பே சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர்கள் முழக்கத்தை அடுத்து பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய நேரம் இது என்றும் ஆளுநர் கூறியதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தான் கூறியதில் தவறு ஏதும் இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஆளுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வெளிநடப்பு செய்யுங்கள்
இதைத் தொடர்ந்து, தனது உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் திமுகவினர் 5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு அவைக்கு திரும்பலாம் என ஆளுநரே ஆலோசனை கூறியதால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது. எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்வதை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பியதுடன் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு ஏன்
ஆளுநர் உரையை புறக்கணித்து திமுகவினர் சட்ட சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வெளிநடப்பு செய்தது ஏன் என்று விளக்கம் அளித்தார். மத்திய அரசின் பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது என்று குற்றம் சாட்டிய அவர், 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கவில்லை என்றார்.
ஊழல் புகார் மீது நடவடிக்கை இல்லை
அதிமுக அரசு மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம். நடவடிக்கை எடுக்கவில்லை
7 தமிழர் விடுதலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சட்டசபைக் கூட்டத் தொடர் புறக்கணிப்பு
அமைச்சர்கள் மீதான ஊழல், எழுவர் விடுதலை, மக்களின் பிரச்னைகள் குறித்து பேச சட்டசபையில் எந்த வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை. ஏற்கனவே மக்கள் மன்றத்தில் இதை பேசிவிட்டோம் . கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்கிறோம்.
கடைசி பட்ஜெட் இதுதான்
பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம். சட்டசபையில் வாய்ப்பு கிடைக்காது என்பதால் மக்கள் மன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எடுத்து வைக்க உள்ளோம். ஆளும் அரசின் கடைசி பட்ஜெட் இது அமைதியாக இருங்கள் என்று ஆளுநர் கூறினார். அது உள்ளபடியே உண்மை. ஆளும் அரசின் 'கடைசி' பட்ஜெட் இதுதான் என்றார்.