நாளை போராட்டம்.. திட்டமிட்டபடி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்.. இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு!
சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டம் பெரிய அளவில் ஆதரவை பெற்று வருகிறது.
சிஏஏ சட்டத்திற்கு எதிர்த்து நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தது. ஆனால் இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் மன்ற நிர்வாகி வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் அமைதியான போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செய்ய அனுமதிக்க முடியாது. சிட்டி போலிஸ் சட்டத்தின் படி போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது. இதனால் அந்த போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக, சிஏஏவுக்கு எதிராக நாளை திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் காஜா முகைதீன் தெரிவித்துள்ளார்.
அதில், இந்த தடை உத்தரவு எங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் இந்த வழக்கில் மனுதாரர்கள் இல்லை. அதனால் நாங்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதில் தவறு இல்லை.
நாளை தேசியக்கொடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும். திட்டமிட்டாடி கண்டிப்பாக போராட்டம் நடக்கும் என்று, குறிப்பிட்டுள்ளார். இதனால் சிஏஏ போராட்டங்கள் தமிழகத்தில் பரபரப்பை பெற்றுள்ளது.